அமைதி வழி
ஒரு ஊரில் ஒரு நரியும் கரடியும் இருந்தது. நரிக்கும் அந்த ஊரில் வாழும் தேனீக்களுக்கும் தீராப் பகை. நரி என்ன செய்தது, சரியான சமயம் பார்த்து கரடியிடம் போய், “தேன் எடுக்க இது நல்ல சமயம்,” என்று போட்டுக் கொடுத்தது. பேராசை பிடித்த முட்டாள் கரடியும் ஓடிப் போய் தேன் கூட்டைக் கலைத்தது. ராணித்தேனீ உட்பட வேறு பல தலைத்தேனீக்கள் சாகவும், “இருக்க இடம் இல்லாமல் நம் அடை நாசம் போய் விட்டது,” என்று கோபப்பட்ட தேனீக்கள் நரி கரடியை மட்டுமல்லாமல் அங்கு நாகரீகமாக வாழ்ந்து கொண்டிருந்த ஆடு மாடு கோழி வகையறாக்களையும் கொட்ட ஆரம்பித்து விட்டது.
“முதலுக்கே மோசம் வந்து விட்டது,” என்று கவலைப்பட்ட மனிதர்கள், “உன் சண்டையை நரியோடும் கரடியோடும் நிறுத்திக் கொள், இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளாதே,” என்று தேனீக்களுக்கு அறிவுரை சொன்னார்கள். “என்னடா இது, இந்த நரியையும் கரடியையும் ஊரை விட்டு விரட்டாமல், நம் கூட்டைக் கலைத்து நாம் இருக்க இடம் இல்லாமல் செய்தவர்களை ஒரு வார்த்தை சொல்லாமல், நம்மை சமாதானமாகப் போகச் சொல்கிறார்களே,” என்று மனம் நொந்த தேனீக்கள் அத்தனையும் அக்கணமே அகிம்சாவாதிகளாக மாறி பக்கத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து மாய்ந்தன.
அதன்பின் இருக்கிற தேனையெல்லாம் குடித்து முடித்து, தேனும் தேனீயும் தேன்கூடும் இல்லாததைப் பார்த்து, “இப்படி ஆகி விட்டதே,” என்று வருத்தப்பட்ட கரடியையும் நரியையும் மெச்சி பிரம்மதேவன் விண்ணில் தோன்றி “உம் கருணையால் யாம் மகிழ்ந்தோம், இக்கணமே நீவிர் மனிதத்தன்மை பெறுவீர்களாக,” என்று அருளினான். மனிதத்தன்மை பெற்ற நரியும் கரடியும் தேனீக்களுக்கு கோயில் கட்டி ஒவ்வொரு ஆண்டும் அந்நன்னாளை தேன்குடி திருவிழா நடத்தி கொண்டாடின.
#humanitarianism


