சோலைமலை ஊடுவிரித் தொட்டிலோ புல்விரிந்த
கோலவெழில் பைம்பொழில் நாடு.

96

பைம்பொழில் சூழப் பொழிலாட்சி பின்னாளில்
பொள்ளாச்சி யென்றே திரிபு.

97

இருவுளஞ் சேர்ந்தின்பம் வாழ்வில் மகிழ்வுஞ்
தருங்கா தலைப்போற் றுதும்.

98

பாறை தனைப்பொளித்து கற்சிலை யாக்கிடி
மாதலால் காதல்செய் வீர்.

99

வெண்முகில் ஈர்த்து தலைதனில் சூடிடும்
செங்கோட் டிற்கது பொற்பு.

100 💪

பொற்பு - ஒப்பனை

வருஞ்சேதி உண்மை யெனநம் பிடுவார்
பொறியிலி ஆய்ந்தாரா யாது.

101

பொறியிலி - அறிவற்றோர்

பெட்பிலா வாழ்வு தெளிநீர் வறண்டநல்
லாற்றின்கண் நின்றிடுமோ டம்.

102

பெட்பு - அன்பு, காதல்

பிறர்நலம் நோக்கிச் செயல்கள் பலபுரிவார்
தன்னலன்னோக் காப்பெருந்த கை.

103

தலைகீழ் உருவென குட்டையான ஏரியில்
ஓங்கிநின்ற பல்லடுக்கு வீடு.

104

சிறுநிழலி ருட்டல்ல நம்பி வெளிச்ச
வெளிநோக் கிடுஞ்சிறுத ளிர்.

105

சின்னஞ் சிறுமழலை யூட்டிடும் அன்னக்கூழ்
பென்னம் பெரிய பரிசு.

106

பூசலும் ஏசலும் செய்திடுவாள் பேரன்பு
பூசிய உள்ளமுடை யாள்.

107

சினங்கொண் டவள்முகத்துப் புன்னகை பாலை
நிலத்துப் புதுப்பெயல் போன்று.

108

புதுப்பெயல் - முதல் மழை

மதத்தின் புரணி பளபளக்கும் உள்ளூறும்
சூழ்ச்சி புரளி பல.

109

புரணி - புறத்தோல்

காலம் புரள உடனோடும் நம்வாழ்வு
ஞால அறிவு பெறின்.

110

குருடாய்ப் புரளிப் பகிர்வார் முயலார்
தரவுகள் கொண்ட றிய.

111

மனத்துப் புரிசை இடித்திட வீழும்
சினத்துப் புரிசை பல.

112

புரிசை - மதிற்சுவர்

ஏர்பிடித்தோர் தற்கொலை செய்யும் ஊரினில்
தேர்பிடித்தே ஊர்வல மோ?

113

புருவஞ் சுருங்கும் பருவம் எனினும்
புருவை மனத்திலன் றோ?

114

புருவை - இளமை

புரைசை வலிதென் றெண்ணுமாம் தன்முழு
நிறையறி யாதக் களிறு.

115

புரைசை - யானைக் கட்டும் கயிறு...

கசந்தாலும் உண்மை நனிதே இனித்தே
கவலையீனும் பொய்யை விட.

116

எண்ண அலையொத்தோர் புல்லிய நட்பு
என்றும் நிலைத்திடு மே.

117

புல்லிய - பொருந்திய, நெருங்கிய

தரவுதா வென்றே வினவநம் பாமை
தவறெனச் சொல்லும் மதம்.

118

மல்லனோ புல்லனோ கள்ளனோ ஆராய்ந்து
நல்லனைத் தேர்தல் நலம்.

119

தீந்தேன் தடவிய அம்புமுயிர் கொன்றிடும்
தீயவர் இன்சொல்லும் தீது.

120

வீரம்போ ரிடல்மட்டு மன்று உயிர்க்குருதி
யீதலும் பெருவீர மாம்.

121

நல்லாரைப் போற்றும் உலகமோ நல்லாரின்
புல்லாரைத் தூற்றுஞ் சூழ்ந்து.

122

புல்லார் - எதிரி

புல்லார் ஒருவரும் வேண்டிலை அன்பு
இல்லார் அழிந்தொ ழிய.

123

பெர்னௌலி தேற்றம்

சீரென ஓடிடும் பாய்மத்தெப் புள்ளியின்
ஆற்றலின் கூட்டலொன் றே.

124

மாசாக்கும் நீர்நிலம் காற்றை நிறுவனம்
காசாக்கும் கேளா தரசு.

125

பூவிதழ் காணும் தேனீக்கள் அதைத்தாங்கும்
புல்லிதழ் காண்பதில் லை.

126

புல்லிதழ் - பூவின் இதழ்களைத் தழுவித் தாங்கி நிற்கும் காம்பின் இதழ் வட்டம், Sepal, Calyx

தூய்மை யெனக்கூ வுவார்துப் புரவுப்
பணியா ளரைமதி யார்.

127

மலரோ ஒருநாள் உதிர்ந்திடும் புல்லிதழ்
உதிராது தாங்கும் கனி.

128

வில்விழி யாலவள் வீசும் கணைகளோ
புல்லுதே யுள்ளப்பூ வை.

129

புலரும் பொழுதிங்கு நற்பொழுதே புத்தம்
புதிதா யுணர்வாய் மனத்து.

130

உண்மை நவின்றிட போமெதற்கு உள்ளத்து
திண்மை வளர்த்திட போம்.

131

போம் - அச்சம், போகும், போய் விடும்...

அறிவாள னென்பார் தரவுகேட் பின்புல்
லறிவாள னாய்க்குரைப் பார்.

132

புல்லறிவாளன் - கீழ்த்தரமான அறிவுடையவன், அறிவிலி

விழுமுக மூடிகள் கற்றுத் தருமே
விழுமியப் பாடம் பல.

133

மிடுக்குத் தமிழ்ச்சொல் லிருக்க ஒட்டிக்
கெடுக்கும் வடமொழியெ தற்கு?

134

கதிரின் ஒளியில் புலர்த்திய மத்திக்
கருவாடு என்றும் அமிழ்து.

135

கெப்ளரின் முதல் கோளியக்க விதி:

கோள்சுற்றுப் பாதைநீள் வட்டம் அதன்குவி
யங்களி லொன்றுக் கதிர்.

136

கெப்ளரின் இரண்டாம் கோளியக்க விதி:

சமநேரத் தேகோள் கதிரிணைக்குங் கோடு
விரவும் பரப்பு சமம்.

137

கெப்ளரின் மூன்றாம் கோளியக்க விதி:

சுற்றுக்கா லத்தின் இருபடிநேர் சார்பாம்
அரைப்பேரச் சின்முப் படிக்கு.

138

உளத்தே நகைத்துப் புறத்தேச் சினக்கும்
புலவி உறவின் நகை.

139

மெல்லென் றுதிக்கும் கதிரோன் வரும்வரை
புல்லில் உறங்கும் பனி.

140

தேங்கிய ஆழியின் ஆழம் பெரியது
ஓங்கியக் கோட்டை விட.

141

கோடு - மலை

வேடுதற் செய்யாப் புலிக்குடத்தி ஓடுமாம்
வேடிய எச்சம் எடுத்து.

142

புலிக்குடத்தி - கழுதைப்புலி, hyena
வேடுதல் - வேட்டை (Hunting)

தேர்வின் முதல்நாள் படித்து மனனஞ்செய்
வார்மறப் பாரடுத்த நாள்.

143

மனனம் - மனப்பாடம், memorization

கூட்டத்தில் அம்மாவென் றேயழுங்கு ழந்தையாய்
வாட்டத்தில் வாடும் மனம்.

144

புலிங்கம் எரிக்குமே பூம்பொழிற் காடு
பழித்தல் எரிக்குமே நட்பு.

145

புலிங்கம் - தீப்பொறி (Spark)

கண்ணோடு காட்சியாய் கண்டேனே கண்மணியே
விண்ணோடு வீழ்ந்தேன் வியந்து.

146

கதிர் மறைப்பு (Solar Eclipse)

கதிரோன் மறைத்துடன் காரிருள் ஆகும்
மதியோன் நடுவே வர.

147

பொகுட்டெனப் பொய்த்திடுவர் மெய்வீழப் பொய்யே
பொருட்டெனப் பேசி வரின்.

148

பொகுட்டு - நீர்க்குமிழி

நன்னெறி எம்கொள்கை யென்பாரெ திர்க்கருத்தாய்
வன்சொல்லை வீசும் புலை.

149

புலை - இழிவானவன், அற்பன்.

என்னிழல் தன்னோடு என்னிழல் ஆகிய
என்னவள் தன்னிழலு மிங்கு.

150

ஹால் விளைவு (2 குறள்கள்)

மின்னோ டிடுங்கடத்தி காந்தவெளி யிற்வைக்க
மின்னழுத்தம் உண்டாகி டும்.

151

மின்னோட்டம் காந்தவெளியின் திசைக்கு உண்டான
மின்னழுத்தம் செங்குத்தா கும்.

152

நற்காலம் நன்னேரம் மட்டு மிலாதிங்கு
நிற்கும் துயரிலும் நட்பு.

153

மாற்றமென மூடரை ஆளப் பணித்திடில்
சீற்றத்திற் பீழைகொள் நாடு.

154

பீழை - துன்பம்

ஆறுவாய்க் கால்கண்மாய் ஊருணி ஏரியென்று
தேர்ந்தப் புழலிருந்த நாடு.

155

புழல் - வடிகால்

காட்சியெழில் காண்பவர் கண்ணில் கவிதையும்
வாசிப்போர் உள்ளம் பொறுத்து.

156

கலைமுகத்தே காற்றில் கலைந்திட்டக் கூந்தல்
கலையோவி யந்தீட் டுதே.

157