பலமொழி போற்றல் பிழையில்லை ஆயினும்
தாய்மொழி தூற்றல் கொடிது.

1

சாதிதனைப் பாராது நட்பு பிரிவினை
நோக்கினி லாகாது நட்பு.

2

பணிவாழ் விடந்தந்து நன்னட்பு மீந்த
இனிதான சென்னை நகர்.

3

ஏகலை வன்விரல் கேட்டதர்ம மின்று
தரமிலை என்றீந்த நீட்.

4

நற்றமிழ்ச் சொல்லிருக்க ஏன்வடச் சொல்லஃது
நல்லுடல் கெடுக்கும் ஒட்டு.

5

வங்கிக்கும் பேசிக்கும் கேட்பார்நம் ஆதார்
தனியுரிமை போற்றா தார்.

6

பூவின் நிலைகள் பனிரெண்டிற் கும்பெயர்
கூறி மகிழும் தமிழ்.

7

அரும்பு, நனை, முகை, மொக்குள், போது, முகிழ், மலர், அலர், பொதும்பர், வீ, பொம்மல், செம்மலர்

பிழைகள் தவிர்த்தெ ழுதுக எழுத்துப்
பிழைகள் எனல்பிழை யாம்.

8

கடவுளின் பேரால் கலவரம் தீததிலும்
தீதுமக்கள் காவா தரசு.

9

குடிசைகள் தன்னை எரித்தது தீயன்று
உள்ளத் தெரியுஞ்சா தீ.

10

உண்மை யறிய முனையா ரவர்மனக்
கட்டமைவு வீழவிரும் பார்.

11

மாலை வெயில்வா னெனவுன் எழில்மிகு
பூப்புன் நகைவெட் கமே.

12

விரல்வழிக் காணா எழில்கண் டிடுவார்
விழிவழிக் காணா தவர்.

13

ஏரியில் வீடுகட்டி ஆறிரண்டை மாசாக்கி
மாரியில்தள் ளாடும் நகர்.

14

தாய்மொழிக் கல்லார் பயனில என்றிடு
வார்வாழ் வறியாப் பதர்.

15

சிகரம் விழுபவன் கைப்பற்றி காத்தல்போல்
நேரக் குருதிக் கொடை.

16

நாடே வரிசையில் நின்றது காரணம்
நாட்டெல் லையிலே படை.

18

ஊருக்கு அப்புறம் சேரி மனத்தோடு
ஊறிய சாதி அழுக்கு.

19

அயர்ச்சி தனில்வீ ழலியல்பு மீண்டும்
முயற்சி கொளல்மீச் சிறப்பு.

20

சொல்லும் கருத்தை விடச்சொன் னதுயார்
எனநோக்கும் விந்தை யுலகு.

21

உரிமம் வினவுபவர் கண்டு பயமில்
மிதிவண்டி ஓட்டு பவர்க்கு.

22

இளமையில் கல்லென சொன்னவூரின் நன்கு
படித்தவளைக் கொன்றது நீட்.

23

குறைதிருத்தி வாழ்வினிக்க நேர்வழிச் சேர்ந்த
நிறைவாழ்வு ஆசான்கொ டை.

24

கனவினைக் கொன்றாய் கருத்தினைக் கொன்றாய்
விளைவுகள் கொல்லும் உனை.

25

பசிக்கனவு தேடு இலட்சந் தரின்நல்
பயில்மன் றமுந்தரும் நாடு.

26

துயரிலா வாழ்வென் றுமினித் திடாதுயர்
நன்மை உறுத்தும் வழி.

27

செலவினைப் பார்த்துநல சேவை மறந்த
வணிகம் இழக்கும்நல் பேர்.

28

நல்லாட்சி என்பார் நலமொன்றுஞ் செய்திடார்
ஆளத் தெரியாமூ டர்.

29

எதிர்கேள்வி கேட்டால் துரோகியென்றே தூற்றிடுவார்
தேர்தலில் தோற்றேப்போ வார்.

30

விழித்திறக்க வீழ்ந்தாய் மனத்தினில் நித்தம்
விழித்திருக்க வைத்தாய் எனை.

31

நின்னின்சொல் லென்ற அமிழ்து அதையேந்தும்
என்மன மென்னுங்கோப் பை.

32

கடினம் எனவேக் கடந்திடில் என்றும்
கடினம் கடப்ப தில.

33

எனதிர வின்நில வென்றிட நாணியே
மேகத் தொளிந்த முகம்.

34

வெல்வது யாரோ பகைமூளும் போர்தனில்
தோற்பது நல்மனி தம்.

35

வேளோண் விழிவழிநீர் வீழா திருக்க
விண்மழைநீர் மண்ணின் விழா.

36

மாரிதருங் கொண்டலைக் கண்டதும் தன்னழகு
பீலிகொண் டாடும் மயில்.

37

வானீயும் சீர்மழை தன்னில் நனைய
மழலையா யான மனம்.

38

நீர்நிலை ஏரி தனில்வீடு கட்டிமழை
நீரில் தவிக்கும் நகர்.

39

வீழ்ச்சி திருப்பம் அணையென ஆயினும்
வாழ்வுமுன்னே செல்லும் நதி.

40

அணையா டணைந்திருந் துமடை திறந்ததும்
பாய்ந்தோ டிவரும் நதி.

41

சூரியக்க திர்தனை நீர்கொண்டல் மூட
விரியும் எழில்வான வில்.

42

பாலைநாட்டில் நீரினில் தோரணம் நம்நாட்டில்
பாலையாய் மாறுதே ஆறு.

43

தரநீயார் என்றேகேள் பெண்ணே விடுதலை
நானெனக் கீந்த தென.

44

தரநீயார் என்றேகேள் பெண்ணே விடுதலை
நானெனக் கீந்த தென.

44

தமிழ்ப்பால் உடையன்பால் முப்பால் தனையீந்த
தன்னிகரில் லாவள் ளுவன்.

45

கல்லூரி காலங்கள் நீங்காது நின்றிடும்
உள்ளம் மறந்திடு மோ?

46

காக்கும் கடல்நோக்கி நிற்பவர் கண்ணீரில்
மூழ்கும் அசையா அரசு.

47

புரிந்தும் புரியாக் கருத்தினைத் தேற்றி
இயம்புதல் நற்கவி யாம்.

48

வயல்தன்னில் நற்பயிர் செய்து நிதம்நம்
உயிர்காக்கும் நல்லுழ வன்.

49

கண்ணாட்டி உன்னிரு கண்கள் எனைநானே
கண்டிடும் கண்ணா டியோ.

50

குற்றம் புரிந்தவர் குற்றவாளி சுற்றமில்லை
என்னுங்கௌ சல்யாசங் கர்.

51

பிம்பங்கொண் டாயிரம் காதைகள் செய்திட்டீர்
பிம்பம்வீ ழவீழும் புகழ்.

52

உப்பிட்ட மாவைக் குழித்தட்டில் இட்டவித்து
தட்டினில் இட்டயிட் லி.

53

புதுமை யெனவே புதிதாய் மலரும்
கதிரின் விடிநற்கா லை. 54

நதியின் தடமது ஒன்றே இருப்பினும்
ஓடிடும்நீ ரோபுதி தே. 55

நாடகமாய் ஓடிடும் வாழ்வினில் ஒவ்வொரு
காட்சிகா ணப்புதி தே. 56

கருவில் மிதந்து நெடுந் துகில்கலைய
ஓவென அழல்புது மை. 57

புதுமை யெனலென் றும்புதுமை யல்லமனம்
ஏற்றபழ மையும்புது மை. 58

காவியின் காவியம் காற்றில் பறந்திட
போட்டியில் வென்றநோட் டா.

59

தனிமை தருமமைதி ஆழி நிலத்து
நெருங்க அலையுங் கடல்.

60

நியூட்டன் முதல் விதி (குறள் வடிவில்)

நிற்ப தியங்கிலை ஊர்வது நிற்றலிலை
ஓர்விசைசெ யல்படாவி டில்.

61