🛑 ஆ.ராஜா குரல் பதிவு – சில உண்மைகள்

பதிவு: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்டுரையாளர்.

"ஆ ராசாவின் குரல் பதிவு திமுக வட்டாரத்துக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறி இருப்பது எல்லாம் உண்மைதான்! நான் அப்போது கலைஞருடன் நெருக்கமாக இருந்தேன்! அந்த நேரத்தில் அவரது உடல்நிலை சீர்குலைந்து இருந்தது! ஏதோன்றையும் நிர்வகிக்க இயலாத நிலையில் அவர் இருந்தார்! அந்த இடைப்பட்ட நேரத்தில் கட்சி ஸ்டாலின் கையில் சென்று விட்டது! பேராசிரியர் அன்பழகன் கூட இதுகுறித்து ஏதும் பேச முடியாதபடி மௌனமாக இருந்தார்!

கருணாநிதியின் இறுதிகாலத்தில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால்தான் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை என்கிறார். ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்குதா? டெல்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா? கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார். என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ள முடியாது என்கிறார்.

ஸ்டாலின் அவரது அப்பாவை கைதி போல வைத்திருந்தார். சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர்.

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களையெல்லாம் ஸ்டாலின் தான் தேர்ந்தெடுத்துப் பட்டியல் இட்டார். இறுதியும் செய்தார்! என்னைப் பற்றி கலைஞர் பலவாறாக எடுத்துச் சொல்லியும் கூட அந்தப் பட்டியலில் இணைக்காமல் அதை எல்லாம் அசட்டை செய்தார். அந்த வகையில் கலைஞர் ஸ்டாலினின் போக்கு குறித்து என்னிடம் குறைபட்டுக் கொண்டதுண்டு. அவருடைய செயலாளர் சண்முகநாதன் கூட இது குறித்து என்னிடம் அங்காலாய்த்து கொண்டிருந்தார். இப்போது அவர்கள் இருவரும் இல்லை!
இதற்கிடையில் 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ. ராசாவை கைது செய்து இரண்டு மாதம் திகார் சிறையில் அடைத்து விட்டார்கள். அவர் சொல்லி இருப்பது போலவே இரண்டு மாதங்களாக யாருமே அவரைச் சென்று பார்க்கவில்லை. சென்று யாராவது பார்த்தாலும் கூட அவர்கள் கண்காணிப்பில் எடுக்கப்படுவார்கள் என்கிற அச்சம் இருந்ததோடு, முற்றிலும் ஆ. ராசாவே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற நிலையிலும் திமுகவின் தலைமை அலட்சியமாக நடந்து கொண்டது. ஊழலில் மட்டும் பங்கு! வழக்கு என்றால் அவர் தனி நபர் ஆகிவிடுவார்!?

இருந்தாலும் நானும் அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரும், அவர் பெயர் சொன்னால் அவருக்கும் ஆபத்தாகிவிடும், இருவரும் சேர்ந்து அவரை பட்டியாலா கோர்ட்டில் போய் பார்த்தோம்.

ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பதும் உண்மை.

இதற்கு அடுத்து நடந்தது என்னவென்றால், கனிமொழி கைது செய்யப்பட்டு அதே திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டபோது எல்லோரும் குய்யோ முறையோ என ஓடிச் சென்று பார்த்தார்கள். பிறகுதான் அங்கு ராஜாவும் இருக்கிறார் என்கிற முறையில் அவரையும் சந்தித்தார்கள். ஸ்டாலின் கூட மிக தாமதமாக கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் கழித்த பிறகுதான் போய்க் கனிமொழியை, ஆ. ராசாவை சந்தித்தார் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அந்நேரத்தில் கட்சியை ஸ்டாலினும் அவரது மருமகனும் ஏறக்குறைய கையிலெடுத்து விட்டார்கள்! கலைஞரின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்து எதுவும் பேச இயலாத நிலையில் அவர் மௌனம் ஆக்கப்பட்டு விட்டார்!
எனக்கு அது நன்றாகத் தெரியும். அந்த நேரத்தில் பேச முடியா கலைஞர் வைகோவிடம் எதிர்காலத்தில் ஸ்டாலினை நீங்கள் பாதுகாத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்க எந்தவித ஒரு வாய்ப்பும் இல்லை. இப்போது இது மாதிரியான கதைகளை வைகோ சொல்லி வருகிறார்! கலைஞரின் கடைசி காலத்தில் இத்தகைய நிலைப்பாடுகளை எடுப்பதற்கோ, சொல்வதற்கோ, யாருடனும் கலந்தாலோசிக்கவோ அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவற்றையெல்லாம் மறைத்து வைகோ கதை விட்டுக் கொண்டிருக்கிறார்.

கலைஞரின் இறுதிக் காலத்தில் அடிக்கடிச் சென்று அவரைச் சந்தித்து வந்தவன் என்கிற முறையில், இன்றைக்கு ஆ. ராசா சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்று என் மனதறிந்து கூறுகிறேன்.

இந்த உண்மைகளுக்கு எல்லாம் அப்பால் அரசியல் சதுரங்க ஆட்டம் நடக்கின்றது! நீயா நானா என்கிற போட்டி கட்சிக்குள்ளேயே அதிகரித்திருக்கிறது. இப்படித்தான் திமுகவில் நடந்துகொண்டிருக்கிறது! இனி என்ன நடக்க இருக்கிறதோ பார்ப்போம்.

ஆ. ராசாவின் இந்தக் குரல் பதிவு வரும் தேர்தல் நேரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது? அதனால் கட்சிக்குள் ஏற்படும் குழப்பங்களையும் இந்தத் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்கத்தான் போகிறது."

பதிவு: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்டுரையாளர்.

A #GoodRead from * #TheSeithikathir#Whatsapp!
* https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

Seithikathir Tamil News

Channel • 62K followers • Seithikathir Tamil News Channel Tamil Nadu Politics | Breaking News | India & World News தமிழ் செய்திகள் | தமிழக அரசியல் | உடனடி செய்திகள் Independent Tamil Journalism

WhatsApp.com