விருது
வைரமுத்து ஞானபீட விருது பெற்றிருக்கிறார், வாழ்த்துக்கள்.
எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த மாதிரி விருதுகளில் மட்டுமல்ல, எத்தகைய புகழ் வெளிச்சத்திலும் நம்பிக்கையில்லை. அதன் பயன் தனி நபருக்கு அவர் வாழும் காலத்தில் அனுபவிக்க கிடைக்கலாம் என்றாலும் இலக்கிய ரசனையும் அழகியல் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் புகழ் வெளிச்சத்தில் மயங்கினால்கூட எது எப்படி என்பதை எக்காலத்திலும் ஒரு நாள் விளங்கிக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
வைரமுத்துவுக்கு கிடைத்திருக்கும் விருது அவரது உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் உலகியல் அறிவுக்கும் கிடைத்திருக்கும் விருது. முதல் போட்டு முதல் எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த சாமர்த்தியம் இல்லாமல் இக்காலத்தில் எந்த அங்கீகாரமும் யாருக்கும் கிடைப்பதில்லை. எங்கு மௌனமாக இருக்க வேண்டுமோ அங்கு மௌனமாக இல்லாதவர்கள் நம்மில் யார்? “செல்லா இடத்துச் சினம் தீது,” என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அது நம் எல்லோருக்கும் பெரிய அறவுரை.
அதற்கு அப்புறம், “செல்லிடத்தும் இல் அதனின் தீய பிற,” என்று அவர் சொல்வது நம் கோபம் செல்லாது, நமக்கே ஆப்பு வைக்கும், என்று கோபப்பட வேண்டிய இடத்தில் சும்மா இருந்துவிட்டு அது செல்லுபடியாகும் இடத்தில் கோபப்பட்டால் நாம் எப்படிப்பட்டவர்கள் ஆகிறோம் என்று யோசிக்க வைக்கிறது.
ஆபிஸில் ஆமாம் போட்டுவிட்டு வீடு வந்ததும் முதல் ரிங்கில் கதவு திறக்காத மனைவியின் கன்னத்தில் கை வைப்பதைவிட எது பெரிய தீது? நண்பருக்கு மனைவி, உங்களுக்கு வைமு, எனக்கு வீணாப்போன ட்ரம்ப்.
—