ஒன்று மட்டும் தான்… | அறிவியல் புனைவு கதை | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 50 |

அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, குடும்பங்கள் அனைத்தும் டிவி திரைக்கு முன்பு காத்துக் கிடந்தது. கார், ரயில் என பயணத்தில் இருந்தவர்கள் கூட தங்கள் மொபைல் ஃபோன்களை ஆன் செய்து வைத்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியை காண ஆவலாக காத்திருந்தனர். ஒரு நபர், அந்த ஒரே நபர்!!!! அப்பப்பா அவருக்குள் அவ்வளவு திறமையா? ஒரு நபர் தன்னுடைய புத்தகத்தின் மூலம், உணர்வற்று அலைந்து கொண்டிருந்த உலகிற்கு வெளிச்சத்தை பாய்ச்சி விட முடியுமா?

என்னப்பா இப்படி கேட்டு விட்டாய்! வரலாறு கூறும் புத்தகங்கள் தான், வரலாற்றின் அடுத்தடுத்த பக்கங்களுக்கு அச்சரம் போட்டது என காலம் காலமாக அறிந்து வந்தது தானே! ஆனால், தொழில்நுட்பம் இந்த அளவிற்கு வளர்ந்து விட்ட காலத்திலும் கூட, போயும் போயும் ஒரு புத்தகத்திற்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகுமா?

சரி எப்படியோ எழுதி இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துவிட்டார். புத்தகம் எழுதியும், ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால், ஒரு கோடி பிரதிகளை கடந்து விட்ட போதும், அந்த புத்தகத்தை எழுதிய புண்ணியவான் முகத்தை இன்னும் ஒருத்தரும் பார்க்கவில்லை. என்னடா இது புது பிரச்சனையாக இருக்கிறது. பெயரைக் கேட்டால், 01001000 01101101 01100011 01101100 01101100 00100001 என ஏதோ பைனரி(சங்கேத) எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார். அதை எப்படி decode செய்து பார்த்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. சரி, புத்தகத்தையாவது ஒரு மொழியில் எழுதி தொலைத்தாரா? கேட்டால் உலகத்திற்கே புரியும் மொழி என்று, சங்கேத மொழியிலேயே சங்கீதம் வாசித்திருக்கிறார்.

அதையும், மக்கள் மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஒரு ஓபன் சோர்ஸ் கூட்டம் வேறு. அதுவும் புத்தகத்தை போட்டதும் போட்டார். கட்டற்ற உரிமையோடு போட்டுவிட்டார். பிரின்டிங் மிஷின் இருந்தவர் எல்லாரும், புத்தகம் வெளியிடத் தொடங்கி விட்டார்கள். கம்ப்யூட்டர், மொபைலில் படித்தது போதாது என்று, பிரதி எடுத்து வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால், ஒரு கோடி பிரதிகள் தான் வெளியாகி இருக்கிறது என பத்திரிக்கையில் வந்து செய்திகள் பொய்யா? இல்லை இல்லை தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட வெளியீட்டாளர்கள் வெளியிட்ட என் தான் ஒரு கோடியை கடந்து இருக்கிறது. அந்த நபர் கதைகள் எழுதவில்லை. கவிதைகள் பாடவில்லை. தத்துவத்தை விளக்கவில்லை. எதார்த்தம் என்கிற பெயரில், இருக்கின்ற ஒன்றை, இதுவரை நாம் காணாத பாணியில் அனைவரும் அறிய செய்து விட்டார்.

என சிறப்பு விருந்தினருக்கு விளக்கம் கொடுத்து முடித்துவிட்டு, நெறியாளர் கான்பிரன்ஸில் இணைந்திருந்த,  மர்ம எழுத்தாளரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். மெலிந்த தேகம், கூர்மையற்ற பார்வை, கோபமற்ற முக வடிவம், கண்ணீரும் வறண்டு போன கண்கள், சுருண்டும் சுருளாமலும் அரைகுறையாய் காய்ந்திருக்கும் சிகை. ஆங்காங்கே கரை தெரியும் தொள தொள வெள்ளை சட்டையில், அளவுக்கு அதிகமான அளவிலிருந்த பாக்கெட்டில் ஒரு பழைய பேனா மட்டும் சொருகி இருந்தது.

“யோவ் உனக்கே இது நியாயமா இருக்கா? ஊருக்கே முகத்தை காட்டப் போவதாக சொல்லிவிட்டு, ஏண்டா மாஸ்க் போட்டு மூடி இருக்கிற?”என புலம்பும் குரல்கள், வீதி எங்கும் நிறைந்திருந்தன. சலனங்கள் ஏதும் இன்றி, அந்த நபரின் மெல்லிய  குரல் காற்றை வந்து சேர்ந்தது. அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய தொலைக்காட்சிகள், செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த!, மர்ம நபரின் பேச்சை தாய் மொழிக்கு தாரை வார்த்தன.

அந்த நபரின் பேச்சு உங்களுக்காக,

“நிறைவாய் நிறைந்திருக்கும் மக்களே! போயும் போயும் நான் எழுதியதெல்லாம் படித்திருக்கும் உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. என்னவோ யதார்த்தத்தை சொல்லிவிட்டேனாம். நான் யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம். உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?, போய் ஏதாவது உருப்படியாக இருந்தால் பாருங்கள்.”

உடனே குறுக்கிட்ட நெறியாளர்,”சார் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, உங்களை வீடியோ கான்பரன்ஸ் என்று அழைத்து இருக்கிறோம். இப்படி பாதியில் ஓடிப் போனால் என்ன அர்த்தம். ஸ்பான்சர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

“சரி உங்களுக்கு என்ன தான் தெரிந்து கொள்ள வேண்டும்?, என்னை பற்றி தானே?”

“ஆமா சார்! ஆமா”

“ஒன்று சொல்லட்டுமா? நான் என்று ஒன்று இல்லவே இல்லை.”

“என்ன சார் சொல்றீங்க?”என நெறியாளர் தலையை சொறிந்து கொண்டார்.

“சொல்கிறேன். இதோ உங்கள் கண் முன்னால், நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறது அல்லவா?, உண்மையில் இது நாற்காலியே இல்லை. நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு, ஏதோ ஒரு திரையின் ஊடாக இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் திரை தொடுதிரையாகவும் இருக்கலாம். சாதாரண திரையாகவும் இருக்கலாம். கோடிக்கணக்கான LED விளக்குகளின் கோர்வை தான், நீங்கள் பயன்படுத்தும் திரையாக இருக்கலாம். சரி எந்த வகை திரையாக இருந்தாலும்,அந்தத் திரையில் என் உருவம், உங்கள் முன்னால் வீற்றிருக்கிறது. நான் பேசும் குரலோ, உங்கள் திரைக்குப் பின்னால் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம், மின்னோட்ட அலைகளிலிருந்து செவியுணர் அலைகளாக மாற்றப்படுகிறது.

ஒருவேளை, நான் இறந்து போய் இருநூறு ஆண்டுகள் கூட ஆகி இருக்கலாம். ஆனாலும் நான் பேசுவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். காரணம், நான் எனும் இந்த உருவம் ஒரு சேமிப்பு தகட்டுக்குள் சேமிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால்,திரும்பத் திரும்ப  உங்களால் என்னை பார்க்க முடிகிறது.

ஒருவேளை நாம் உண்மையிலேயே நேரலையில் சந்தித்து இருந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் இணைய இணைப்பின் மூலம், என்னுடைய காணும் ஒளியானது,  என் கணினியில் இருக்கும் கேமரா கண்களின் மூலம் உணரப்பட்டு, அதன் சில்லுவின் மூலம், சங்கேத குறியீடுகளாக(binary codes)மாற்றப்பட்டு, என் மொபைல் கருவி அலைகளாய் கடன் கொடுத்த இணைய இணைப்பின் உதவியோடு(Hotspot), கணினியில் இருக்கும் அலை வழங்கின் மூலம்(transmitter) காற்றில்  அலைகளாய் பயணித்து, உங்கள் இல்லத்தின் அருகில் இருக்கும் செல்போன் கோபுரத்தை அடைந்து, அங்கிருந்து ஒளி வடத்தின்(fibre optic cable)உதவியோடு கடல் கடந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் கருவியை இறுதியாக வந்தடைகிறது.

இத்தோடு தான் முடிந்து போய் விட்டதா? நான் பேசும் ஒலி அலைகளும், மின்னோட்ட அலை,மீண்டும் செவி உணர் ஒலி அலை என பல வடிவம் கண்டு, உங்கள் மூளை நியூரான்களை வந்தடைகிறது. இவை அனைத்தும், நீங்கள் கண்மூடி கண்களுக்கும் வினாடிப் பொழுதின் லட்சத்தின் ஒரு பங்குக்கும் குறைவான நேரத்திற்குள் நடந்து முடிந்து விடுகிறது.ஆனால், இவ்வளவு பெரிய விந்தைக்குப் பின்பும் இருப்பது ஒன்றே!

ஆம் ஒன்று மட்டும்தான். ஒன்று மட்டும் தான்.1 மட்டும்தான்.1 ஒன்று என்றால் உண்டு.0 என்றால் இல்லை. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கருவி இல்லை என்றால் இல்லை தான். அந்தக் கருவி இருப்பதால்தான் திரையின் ஊடாக நீங்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் தர்க்கவாதத்தின்(logic)அடிப்படை. இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் இரண்டே கோட்பாடுகள் தான். ஒன்று இருக்க வேண்டும் அல்லது இல்லாதிருக்க வேண்டும்.

ஒன்றில் நீங்கள் உயிரோடு இயங்க வேண்டும். அல்லது உயிரற்ற ஜடமாக  இயற்கையோடு கலந்திட வேண்டும். பெரு வெடிப்பு நடந்ததால், பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டதென நம்புகிறது அறிவியல். ஒருவேளை பெரு வெடிப்பு நடக்கவில்லை என்றால், பிரபஞ்சம் என்றொன்று இருந்திருக்காது. ஆம் எங்கும் இரண்டே வாய்ப்புகள் தான்.

பார்த்துக் கொண்டிருக்கும் அன்பான மக்களே! உங்கள் இல்லத்தில் இருக்கும் மின் விளக்குகளை வினாடிப் பொழுதேனும் அணைத்து விட்டு மீண்டும் போடவும்.

செய்து விட்டீர்களா? ஆம்! இப்போது இந்த பிரபஞ்ச வெளிக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என சமிக்ஞை அனுப்பி இருக்கிறீர்கள். ஆம், ஒரு வினாடி இல்லை என சொல்லி விளக்கனைத்து பின்பு விளக்கை எரிய விட்டதால், உங்களது இருப்பு மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கற்காலத்தில் குகைகளில் வாழ்ந்த உங்கள் முன்னோரும் கற்களை உரசி கண்டுபிடித்ததற்கு பின்பும், இந்த தர்க்கவாத தத்துவம் தான் நிறைந்து இருக்கிறது. இந்த எலக்ட்ரானிக்ஸ் விந்தையில், இல்லாத நான் இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன். யாரடா இவன், பைத்தியக்காரன் போல இவ்வளவு நேரம் உளறுகிறானே என பார்க்கிறீர்களா?” என பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த முகமூடியை கழற்றினார் அந்த மர்ம நபர்.

“என்னடா இது ஆச்சரியமாக இருக்குது?!”

“நம்ம கரோட்ரோ கிரகத்தில் வாழும் பிரஜைகளின் முகத்தில் நெற்றிக்கு கீழே நீல நிறத்தில் அல்லவா? இருக்கும். என்ன இந்த நபருக்கு வேறு நேரத்தில் இருக்கிறது???”

செல்போன் திரைகளையும் தாண்டி, இந்த சந்தேக குரல்  தெருவீதி எங்கும் பரவியது

“உங்கள் சந்தேகம் சரிதான்” மர்ம நபர் பதிலளிக்க தொடங்கினார். “நான் பூமி எனும் கிரகத்தை சேர்ந்தவன். அது சரி பூமிக்கு என்ன? பிரபஞ்சத்தில் போஸ்ட் கார்டு அட்ரஸ் ஆ இருக்கிறது?” எனச் சொல்லிக் கொண்டே தன்னுடைய திரையில் பிரபஞ்ச வரைபடத்தை திறந்த மர்ம நபர்,” பிரபஞ்சத்தின், இந்த அண்ட கூட்டங்கள் நிறைந்திருக்கும் பகுதியில் தான் எங்களுடைய கிரகம் இருக்கிறது(Laniakea super cluster). உண்மையை சொல்லப் போனால், நீங்கள் இருக்கும் அண்ட கூட்டத்திலிருந்து (Hercules super cluster), நாங்கள் சுமார் 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறோம்.”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, இந்த மர்ம நபரை கண்டுபிடிக்க கரோட்ரோ கிரகத்தின், வல்லரசு தேசமான வரோயிய குடியரசின் அதிபர், அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அவருடைய தேசத்தின் அதிவிரைவு படைகள், மர்ம நபர் தங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து, வினாடிப் பொழுதில் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.

“ஹா ஹா முட்டாள்களா! உங்களை விடவும் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்பே, இந்த ஏவுகணைகள் எல்லாம் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். என சொல்லிக்கொண்டே, வீடு போல அமைக்கப்பட்டு இருந்த தன்னுடைய விண்கலத்திலிருந்து, ஒளி வேகத்தில் சிட்டெனப் பறந்தான் அந்த மர்ம மனிதன்.”

ஏவுகணையோ காலி மனையை தாக்க, வான பெருவெளி எங்கும் வினாடி பொழுது மின்னலாய் ஒளி கீற்றுகள் பிறந்தது.

ஏவுகணையின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த டைமர் கடிகாரத்தின் குவாட்ர்ஸ் கற்கள் சிதறி, பக்கத்து மனை காரரின் சோலார் பேனல் மீது பட்டுத்தெரித்தது.

விண்கலத்திற்குள் LED விளக்கை எரிய விட்டபடி, அடுத்த அண்ட பெருவெளியை நோக்கி மர்ம மனிதன் பயணத்தை தொடர்ந்தான்.

                                  – ஸ்ரீ காளீஸ்வரர்.செ

                                                  ——முற்றும்

              

___________________________________________

இந்த எளிய மாணவனுக்கு, எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸை கற்றுத் தர வாய்ப்பு அளித்த கணியத்திற்கும் வாசகர்களுக்கும் நன்றி.

விரைவில்….. புதிய நெடுந்தொடரில் சந்திப்போம்………..

தங்கள் மேலான கருத்துக்களுக்கு மின்மடலை தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

#basicElectronics #dailyElectronics #digitalElectronics #electronics #electronicsStory #sciFiStory #shortStory #story

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

டி-மார்கன் விதிகள் | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 47

லாஜிக் கதவுகளில் நாம் முக்கியமாக மற்றும் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விதி தான். டிமார்கன் விதிகள். இந்த விதியானது பூலியன் இயற்கணிதத்தின் அடிப்படை விதிகளிலும் ஒன்றாக அறியப்படுகிறது.

மற்றபடி உள்ள இயற்கணித செயல்பாடுகளிலும் கூட, பள்ளி அளவிலேயே டிமார்கன் விதிகளை நீங்கள் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரி எப்படி இருந்தாலும், எளிய வகையில் இந்த விதியை உங்களுக்கு விளக்கி விடுகிறேன். இந்த விதி உங்களுக்கு தெரிந்திருந்தால் தான், அடுத்தடுத்து வரக்கூடிய ஆல்ரவுண்டர் லாஜிக் கதவுகள் உங்களுக்கு எளிமையாக புரியும்.

மொத்தமாக டி மார்ன் விதிகளில் இரண்டு விதிகள் இருக்கிறது. முதலில் டிமார்கள் முதல் விதியை பார்க்கலாம்.

டிமார்கன் முதலாம் விதி

வரையறை:

இரண்டு தர்க்க உள்ளீடுகளின் கூட்டுத்தொகையின் மறுதலை(invert value) மதிப்பானது, அந்த இரண்டு தர்க்க உள்ளீடுகளின் மறுதலை மதிப்புகளின் பெருக்கற்பலனுக்கு சமமாக இருக்கும்.

விளக்கம்:

நீங்கள் இரண்டு லாஜிக் உள்ளீடுகளை வழங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த இரண்டு லாஜிக் உள்ளீடுகளையும் NOR கதவைக் கொண்டு லாஜிக்கல் மறுதலை கூட்டல் செயல்பாடை செய்கிறீர்கள். இதன் வெளியீடானது, இரண்டு மறுதலை லாஜிக்கல் உள்ளீடுகளின் பெருக்கல் பலனுக்கு சமமானதாக இருக்கும்.

அதற்குரிய மின்சுற்றானது படத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல லாஜிக் கதவுகளை ஒருங்கமைத்து நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

இதற்கான பூலியன் இயற்கணித உண்மை அட்டவணையானது கீழே வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, A = 0 மற்றும் B = 0 என வைத்துக்கொள்வோம். இதன் கூட்டுத் தொகையும் 0 தான். ஆனால் இதற்கு மறு தலை எடுக்கும்போது மதிப்பு 1 ஆகிவிடும். சரி இது ஒரு புறம் இருக்கட்டும். A மற்றும் B யின் மாறுதலை மதிப்பு முறையே 1 ஆகும். இதன் பெருக்கற்பலனும்  1 தான். இப்போது புரிகிறதா?

இதுதான் டிமார்கனின் முதலாவது விதி.

டிமார்களின் இரண்டாவது விதி

டிமார்கனின் முதல் விதியை அப்படியே திருப்பி போட்டால் எப்படி இருக்குமோ! அது போல் தான் டிமார்களின் இரண்டாவது விதியும் இருக்கும். கொஞ்சம் குழப்புகிறதோ! சரி தெளிவாக சொல்கிறேன்.

வரையறை :-

இரண்டு தர்க்க உள்ளீடுகளின் பெருக்கல் பலனின் மறுதலை மதிப்பானது, அந்த இரண்டு தர்க்க உள்ளீடுகளின் மறுதலை மதிப்புகளின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருக்கும்.

விளக்கம்:-

நீங்கள் இரண்டு லாஜிக் உள்ளீடுகளை வழங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த இரண்டு உள்ளீடுகளையும் NAND கதவைக் கொண்டு லாஜிக்கல் மறுதலை பெருக்கல் செய்கிறீர்கள். இதன் வெளியீடு மதிப்பானது, உள்ளீடுகளின் தனித்தனியான மறுதலை மதிப்புகளின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருக்கும். இதற்கான பூலியன் இயற்கணித அட்டவணை மற்றும் மின்சுற்று படமானது கீழே வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, A = 0 மற்றும் B = 0 என வைத்துக்கொள்வோம். இதன் பெருக்கு தொகையும் 0 தான். ஆனால் இதற்கு மறு தலை எடுக்கும்போது மதிப்பு 1 ஆகிவிடும். சரி இது ஒரு புறம் இருக்கட்டும். A மற்றும் B யின் மாறுதலை மதிப்பு முறையே 1 ஆகும். இதன் கூட்டுத்தொகையும் 1 தான். இப்போது புரிகிறதா?

மேற்காணும் படங்களை வைத்து உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். புரியாவிட்டாலும் கூட, அடுத்தடுத்து வரக்கூடிய ஆல்ரவுண்டர் லாஜிக் கதவுகள் கட்டுரைகள் இதன் அடிப்படையிலேயே விளக்கங்கள் வழங்கப்படும். எனவே அதிலிருந்து எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

#basicElectronics #demorgansLaw #digitalElectronics #electronics #electronicsInTamil #logicGates

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

வருங்காலத்தை  ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 46

கடந்த கட்டுரையில் வருங்காலத்தில் ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாக பார்த்து இருந்தோம். அந்த கட்டுரையின் தொடர்ச்சி தான் இது.

IOT & Remote Networks

இணையத்தோடு இணைந்த சாதனங்கள் என அறியப்படும் IOT (Internet of things)தொழில்நுட்பமானது, கடந்த சில தசாப்தங்களில் அளப்பரிய வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் மற்றும் ஒரு பகுதியில் இருக்கக்கூடிய கருவியை இணையத்தின் ஊடாக இணைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையை ஆகும்.

ஆரம்பகால மாதிரிகளில் அதிகப்படியான மின்சார தேவையும் சக்தி வாய்ந்த இணைப்புகளும் தேவைப்பட்ட நிலையில், தற்காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி இணைய சேவை வசதிகள் போன்றவற்றால், அனைவரும் அணுகக் கூடிய நுட்பமாக மாறி இருக்கிறது இணையத்தோடு இணைந்த சாதனங்கள்.

இதன் அடுத்த கட்டங்களாக பெரும் கருவிகளை இயக்குவது, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து கொண்டே மெய்நிகர்(Virtual reality)நுட்பங்களைக் கொண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது! போன்றவை கூட வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் இருக்கும் ஒரு மருத்துவரால்,அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கு சிக்கலான நரம்பியல் அறுவை சிகிச்சையை கூட மேற்கொள்ள முடியும். ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமும், அதிவேக இணைய நுட்பமும் இணையும் போது இது சாத்தியப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தற்காலத்திலேயே வீடுகளில் இருந்து பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை மீப்பெரும் அளவில் அதிகரித்து வருகிறது.

வரும் காலங்களில் அதற்கு உகந்த சூழல்கள் ஏற்படும். மேலும், அதிக நுட்பம் மற்றும் திறமை கொண்ட பணியாளர்கள், இருக்கும் இடத்திலிருந்து கொண்டே பல்வேறு நாடுகளில் இருக்கும் நுட்பங்களை இயக்கக்கூடிய வசதிகள் இதன் மூலம் சாத்தியப்படும்.6G தொழில்நுட்பம் வந்த பிறகு, இதன் வேகம் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

மேலும், வரும் சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் இத்தகைய இணையத்தோடு இணைந்த கண்காணிப்பு கேமராக்களால் நிறைக்கப்படும். இரவு நேரங்களில் நடைபெறும் குற்றங்கள் பிரச்சனைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும். ஏற்கனவே, நகரங்களில் இணையவழி கண்காணிப்பு கேமராக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் உருவாக்கப்படும். மேலும், நடக்கும் குற்றத்தை செயற்கை நுண் அறிவு கொண்டு கண்டறிந்து, அதன் மூலமே தானியங்கி புகார்களை பதிவு செய்யும் நுட்பங்களை கூட ஏற்படுத்த முடியும்.

இவை அனைத்திற்கும் பின்னால் அதிகப்படியான தொடர்புகளை கையாளக்கூடிய மிகவும் நுட்பமான எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி புதைந்திருக்கிறது.

மொபைல் கருவிகள் மற்றும் கைக்கடிகாரங்கள்

தற்காலத்திலேயே வளையக்கூடிய திரைகளைக் கொண்ட மொபைல் கருவிகள் வரத் தொடங்கிவிட்டன. மேலும், மேககணிமை (cloud computing) போன்ற நுட்பங்களின் மூலம் சக்தி வாய்ந்த கணினிகளை கூட நம்முடைய மொபைல் கருவிகளால் இயக்க முடிகிறது. தற்காலத்தில் இது தொடக்க நிலையில் இருந்தாலும் கூட, வரும் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி அளப்பரியதாக இருக்கும். தற்போது இருப்பதை போல வீடுகளில் கணினிகளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு பதிலாக, ரிமோட் டெஸ்ட் டாப் முறையானது(remote desktop & cloud desk)பெரும்பாலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இருக்கின்ற இடத்திலேயே இருந்து கொண்டு, மிகச்சிறிய கருவிகளைக் கொண்டு சக்தி வாய்ந்த கணினிகளை இயக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், பணிகளின் வேகமும் துரிதப்படுத்தப்படும்.

ஏற்கனவே, கைகடிகாரங்களில் அழைப்புகளை பேசிக்கொள்வது, இதயத்துடிப்பை கண்டறிவது போன்ற நுட்பங்கள் பொதிந்து விட்டன. இதனோடு, சேர்ந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், ஒரு சில தருணங்களில் மொபைல் கருவிகள் மறைந்து போய் கைகடிகாரங்களே மொபைல் கருவிகளை பதிலீடு செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் நம்புகின்றனர். மேலும், கைகளிலேயே மடித்து அணிந்து கொள்ளக்கூடிய மொபைல் கருவிகளும் ஆங்காங்கே சோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும், தற்போது இருப்பதை காட்டிலும் சக்திவாய்ந்த நுட்பமான வசதிகளைக் கொண்ட மொபைல் கருவிகள் வரத் தொடங்கும்.6G தொழில்நுட்பம் வந்த பிறகு , மிக மிக வேகமான இணைய வசதியைக் கொண்டு தற்போது இருப்பதை விடவும் சக்தி வாய்ந்த இணைய செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். சக்தி வாய்ந்த சில்லுகளை பயன்படுத்தி சிக்கலான நுட்ப பணிகளை கூட மொபைல் கருவிகளால் கையாளக்கூடிய சூழல் ஏற்படும்.

அதேபோல, கைக்கடிகார தொழில்நுட்பமும் தொடர்ந்து வளர்ந்து, அதன் உச்சபட்ச நீட்சியை அடையும். மேலும், அத்தோடு செயற்கை நுண்ணறிவு புலன்களும் இணைந்து செயல்படும். மனித உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கண்டறிந்து திடீரென ஏற்படும் இதய நோய் தொடங்கி நீண்ட நாட்களாக இருந்து பாதிக்கக்கூடிய புற்றுநோய் வரை கண்டுபிடிப்பதற்கான நுட்பங்கள் கை கடிகாரங்களுக்குள்ளேயே பொதிவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவை நடப்பதற்கு இன்னும் சில தசாப்தங்கள் நாம் பொறுத்து இருக்க வேண்டும்.

காட்சி படத்துறை

ஒரு காலத்தில் மை டியர் குட்டிச்சாத்தான் போன்ற திரைப்படங்கள் திரைத்துறையின் சாதனையாக பார்க்கப்பட்டன. முதலில் இந்தியாவில் வெளியான முப்பரிமாண திரைப்படமும் அதுதான். தற்காலத்தில், திரைத்துறையில் அபரிவிதமான தொழில்நுட்ப வளர்ச்சி காணப்படுகிறது. வருங்காலத்தில், செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைக் கொண்டு மனிதர்களே நடிக்காமல் கூட திரைப்படக் காட்சிகளை வடிவமைத்து விட முடியும். அனிமேஷன் துறையிலும் கூட மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.

ஜப்பானிய அனிமேஷன் குழந்தை தொடரான டோரிமான் கதையில் வருவது போலே, நம் கணினித்திரையில் வரையும் படங்கள் திரைப்படமாக மாறி நம் கண் முன் வந்து சேரும் நாளும் வெகு தொலைவில் இல்லை. மேலும், தற்போது இருப்பதை காட்டிலும் அதிகமான உணர்திறன் கொண்ட உணர்விகள்(higher sensing rate camera sensors)தயாரிக்கப்படும். இதன் மூலம், காட்சிப்பட தரமானது நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை அடையும்.

குறிப்பாக, வரும் காலத்தில் ஒரு பொருளின் மணத்தை(smell) வெளிப்படுத்தக்கூடிய வகையிலான திரைகளும், கேமரா கருவிகளும் கூட உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட, சில பொதுவான வேதிப்பொருட்களை வாசனை திரவிய வடிவில் சேமித்து வைத்து, திரையில் காட்டப்படும் படத்திற்கு ஏற்ப அதனுடைய வாசனைகளையும் முதலிலேயே பதிவு செய்து வைத்து, காட்சி ப்படுத்தப்படும் திரையில் அத்தோடு நறுமணமும் வீசும்.

உதாரணமாக, அமேசான் காடுகளில் கிடைக்கும் ஒரு அரிய வகை மலரின் மணமானது நம் வீட்டு டிவி திரைக்குள் இருந்து வெளிப்படும். இதற்கு தேவையான கேமரா நுட்பங்களும் ஏற்கனவே சோதனை நிலைகளில் உள்ளன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அத்தோடு செய்யறிவு தொழில்நுட்பமும் இணைவதால், முன்பு இருப்பதை விடவும் இருளிலேயே சிறப்பாக காட்சிகளை பதிவு செய்ய முடியும். மேலும், கண்காணிப்பு கேமரா துறையிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இருப்பதை விடவும் மிகக் குறைவான ஆற்றலை கொண்டே இயங்கும் வகையில் கேமரா கருவிகள் வடிவமைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதேபோல, மொபைல் கேமரா துறை வளர்ச்சியும் படு வேகமாக இருக்கும். இதன் மூலம், தெளிவான நுட்பமான புகைப்படங்களை அனைவராலும் எடுக்க முடியும். முன்பே சொன்னது போல இந்த நுட்பங்கள் சோதனை நிலையில் இருப்பதால் வரும் தசாப்தங்களில் நிச்சயம் இதை எதிர்பார்க்கலாம்.

மருத்துவம்:-

முன்பே குறிப்பிட்டது போல, மருத்துவத்துறையில் எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடுகள் தற்காலத்தில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உயிர்காக்கும் கருவிகள் எலக்ட்ரானிக்ஸ் துறையின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டவை தான். அந்த கருவிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எனவே வரும் ஆண்டுகளில் மிக சிக்கலான உடல் வியாதிகளுக்கு கூட தீர்வு காணும் வகையில் கருவிகளை வடிவமைக்க முடியும். இதன் மூலம், மனித ஆயுள் காலம் குறிப்பிடும் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும், உடனுக்குடன் நோய் கண்டறியும் நுட்பங்களும் வளரும் என்பதால், முன்பு போல நீண்ட கால நோய்களால் பாதிக்கப்படும் நிலை குறைந்து போகும். புற்றுநோய் போன்ற நீண்டகால மற்றும் சில மரபு வழி நோய்களுக்கும் கூட முன்பே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதற்கான நுட்பக் கருவிகள் வடிவமைக்கப்படும். அதிலும் குறிப்பாக, ஏற்கனவே கார்பனின் தனிமப்புறவேற்றுமை வடிவங்கள் (fullerene, nanotube)மருந்துகளை சுமந்து செல்லும் drug delivers வேலைகளைக் கூட செய்கின்றன. மேலும், மனித மூளை நரம்புகளை கட்டுப்படுத்தும் வகையிலான எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் வடிவமைக்கப்பட்டு கொண்டு வருகின்றன. இதன் மூலம் சிக்கலான நரம்பியல் பிரச்சனைகளை கூட கண்டறிந்து துல்லியமான சிகிச்சையை வழங்க முடியும். இவையும் வரும் தசாப்தங்களில் சாத்தியப்படும். ஆனால் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சிக்கல்கள்:-

என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொன்னாலும், அதற்குப் பின்பும் கூட சில சிக்கல்கள் களையப்பட வேண்டி தான் இருக்கும். அப்படி பார்க்கின்ற போது எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சியிலும் கூட சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் துறையில் அடிப்படையாக பயன்படுத்தப்படும் சிலிக்கா,ஜெர்மனியம் மற்றும் மின்கலன்களாக பயன்படுத்தப்படும் அரிய தனிமங்களான லித்தியம் போன்றவை மண்ணில் இருந்தே பெறப்படுகின்றன. இவற்றை அதிகமாக தோண்டி எடுப்பதால் புவி மாசு ஏற்படுகிறது. மேலும், உலகளாவிய அளவில் உற்பத்தி செய்யப்படும் தற்போதைய மின்சாரத்தின் அளவீடானது, பெரும்பாலும் புதைப்படிவ எரிபொருட்களை நம்பியே இருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசும், புவி வெப்பமாதலும் அதனோடு சேர்ந்த இயற்கை சிக்கல்களும் நம்மை வாட்டி வதைக்க தொடங்கி விட்டன.

எனவே, மாசி ஏற்படுத்தாத மூலங்களிலிருந்து இதுபோன்ற எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சூரிய மின்தகடுகள் போன்றவற்றின் வளர்ச்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டிருக்கிறது. தசாப்தங்கள்தோறும் நமக்கு தேவையான ஆற்றல் அளவிடானது பன்மடங்கு உயர்ந்து கொண்டுதான் செல்கிறது.

இது போன்ற சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு, வளர்ந்து வரும் நுட்பங்களில் இருக்கும் எதிர்மறை சிக்கல்களான இணையவழி மிரட்டல்கள், ஏமாற்று வேலைகள்,ஒருதலை பட்ச செயல்பாடுகள், விழிப்புணர்வின்மை போன்றவையும் களையப்பட்டு எளிய மக்களின் கையில் வளர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சென்று சேர வேண்டிய கட்டாயம் காலத்தின் கைகளில் இருக்கிறது.

வருங்கால எலக்ட்ரானிக்ஸ் நுட்பங்கள் குறித்து உங்கள் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை கூட தயங்காமல் மின்மடலுக்கு அனுப்புங்கள்.

மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

#basicElectronics #digitalElectronics #electronics

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

கை கடிகாரத்துக்கு எப்படி உங்கள் இதய துடிப்பு தெரிகிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 44

மருத்துவத்துறை

முன்பெல்லாம் மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி இதயத்துடிப்பை பரிசோதிப்பார். அக்கால மருத்துவர்கள் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடி நகர்வையும் கவனமாக கவனித்துக் கொண்டே, இதயத்துடிப்பையும் எண்ணிக்கொண்டிருப்பார்கள். இதயத்துடிப்பில் திடீரென ஏற்படும் மாற்றங்களை இவ்வாறு தான் அவர்கள் கண்டறிய வேண்டிய நிலை இருந்தது.

தொடர்ந்து இசிஜி போன்ற தொழில்நுட்பங்களின் வருகைக்குப் பிறகு, சிக்கலான இதய கோளாறுகளையும் எளிமையாக கண்டறியும் நுட்பம் வளரத் தொடங்கியது. இருந்த போதிலும் கூட, அவசர சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனைகளில் மட்டுமே இது போன்ற கருவிகள் இருந்தன. இன்றளவும் கூட பல்வேறு கிராமப்புற சிறிய மருத்துவ சிகிச்சை நிலையங்களில் இது போன்ற உயர்  நவீன தொழில்நுட்ப கருவிகளை நாம் எதிர்பார்க்க முடியாது.

சிக்கலான இதய கோளாறுகளை சந்தித்து இருப்பவர்களின் இதயத்துடிப்புகளை சரியாக பார்ப்பதற்கு, தற்காலத்தில் விரல்களிலேயே அணிந்து பார்க்கக்கூடிய ஹார்ட் ரேட் சென்ஸார்(heart rate sensor )மற்றும் பல்ஸ் ஆக்சிமிட்டர்கள்(pulse oximeter)வந்துவிட்டன.

ஸ்மார்ட் கை கடிகாரங்கள்

ஆனால், சமீப ஆண்டுகளாக 500 ரூபாய் முதல் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் கைகடிகாரங்களில் கூட இதயத்துடிப்பை பார்த்துக் கொள்ளும் வசதி இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. சிலர் இதெல்லாம் பொய்; வாய்க்கு வந்த இதயத்துடிப்பு மதிப்பை அடித்து விடுகிறது என்று கருதவும் செய்கிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் தான் என்ன? உண்மையிலேயே கையில் கட்டி இருக்கும் கைகடிகாரத்தால் உங்களுடைய இதயத்துடிப்பை கணிக்க முடியுமா?

உண்மையிலேயே உங்களுடைய கை கடிகாரத்தின் மூலம் இதயத்துடிப்பை கண்டறிய முடியும். உங்களுடைய பொதுவான கைக்கடிகாரங்களை திருப்பி பார்க்கும்போது அதிலிருந்து பச்சை நிற ஒளி(green light usually ranging between 550nm) வெளிப்படுவதை பார்க்க முடியும். அதற்காக சும்மா திருப்பி பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை என்று சொல்லிவிடாதீர்கள்.உங்கள் கைகளில் அணிந்து கொண்டு இதயத்துடிப்பை அளப்பதற்கான அமைப்பில் சென்று பார்வையிடுங்கள்.அதிலிருந்து ஒரு பச்சை நிற ஒளி வெளியேறும். எதற்காக பச்சை நிற led விளக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?

பச்சை நிறக் காரணம்

அடிப்படையில் நம்முடைய ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆனது, பச்சை நிற ஒளியை பிரதிபலிக்கக் கூடியது. அதாவது,ஹீமோகுளோபின் மீது பச்சை நிற ஒளிபடும்போது அவற்றை சற்றே உள்வாங்கிக் கொண்டு உடனடியாக வெளிவிட்டு(absorb and releases)விடும். அது ஏன் பச்சை நிற ஒளியை மட்டும் தான் வழங்க வேண்டுமா?? வண்ண வண்ண கலர் களில் லைட் அடித்தால் ஹீமோகுளோபினுக்கு பிடிக்காத என்று கேட்டு விடாதீர்கள். உண்மையை சொல்லப் போனால், சிவப்பு நிற ஒளி மற்றும் நீல நிற ஒளியானது ஹீமோகுளோபினுக்கு மிகவும் பிடிக்கும். இதன் காரணமாக அந்த நிற ஒளிக் கற்றைகளை ஹீமோகுளோபின் ஆனது தனக்குள்ளாக ஈர்த்துக் கொள்ளும்.(அடிப்படையில், ஹீமோகுளோபின் என அறியப்படும் ரத்த சிவப்பு அணுக்களானது சிவப்பு மற்றும் நீல நிறத்தை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். மேலும் இந்த நிறங்கள் அதிகமாக சிதறடிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.)

அதேநேரம், பச்சை நிற ஒளியை பொருத்தமட்டில் ஹீமோகுளோபின் வெளிவிட்டு விடும். ஒருவேளை பச்சை நிற ஒளிக்கு பதிலாக சிவப்பு நிற ஒளியை நாம் வழங்கினால் நம்மால் சரியாக இதயத்துடிப்பை அளவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். சரி பச்சை நிற ஒளி வெளிப்படுகிறது அதற்குப்பின் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? அந்த பச்சை நிற ஒளி கற்றைகள் நம்முடைய தோலை துளைத்துக் கொண்டு , நரம்பின் வழியாக சென்று கொண்டிருக்கும் ரத்த செல்களை அடையும். அங்கு இருக்கும் ஹீமோகுளோபின் ஆனது இந்த பச்சை நிற ஒளியை உள்வாங்கும், உள்வாங்கிய உடனேயே வெளிவிட்டு விடும். இத்தகைய வெளிவிடப்படும் ஒளியானது கைக்கடிகாரத்தில் இருக்கும் உணர்வியின்(sensor)மூலம் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளியை பரிசோதித்துப் பார்க்கும் கைக்கடிகாரத்தின் உள்ளார்ந்த மின் சுற்று பகுதியானது(IC), எந்த வேகத்தில் ரத்தம் பாய்கிறது? எந்தெந்த இடங்களில் அதிர்வெண் மாற்றம்(frequency change)தெரிகிறது போன்றவற்றை கண்டறியும். எத்தனை வினாடிகளுக்கு ஒருமுறை அதிர்வெண் மாற்றம் தெரிகிறதோ! அதை அடிப்படையாகக் கொண்டு இதயத்துடிப்பானது கணக்கிடப்படும். உதாரணமாக ஆரோக்கியமான மனித இதயத்துடிப்பு 70 முதல் 80 வரை இருக்கும் என்று சொல்வார்கள்.

அப்படியானால், பத்து வினாடியில் சுமார் 12 முதல் 13 தடவை அதிர்வெண் மாற்றம் தெரிந்திருக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் மனித இதயத்துடிப்பானது கணக்கிடப்படுகிறது. ஆனால், இதில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருக்கிறது.  உங்களுடைய தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் உங்களுடைய தோலின் தடிமன் போன்றவற்றாலும் கூட, இந்த இதயத்துடிப்பு அமைப்பானது சரியாக செயல்படாமல் போகலாம். காரணம் இந்த ஒளிக் கற்றைகள் உங்களுடைய தோலுக்குள் ஊரூருவை செல்ல வேண்டும். ஒருவேளை சரியாக ஊடுருவி செல்லவில்லை என்றால், சரியான இதயத்துடிப்பை அறிந்து கொள்ள முடியாது.

மேலும் கைக்கடிகாரத்தை உங்களுடைய கைக்கு ஏற்றார் போல அணிந்து கொள்ள வேண்டும். மிகவும் இறுக்கமாகவோ அல்லது எப்போது வேண்டுமானாலும் கழன்று விழுவது போலவோ அணிந்து கொண்டிருந்தால் சரியான இதயத்துடிப்பை கண்டறியவே முடியாது. மேலும், வெளிப்புற சூழல்களும் கூட இதயத்துடிப்பை தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கைக்கடிகாரம் கட்டி இருக்கும் பகுதியில் அதிகப்படியான வியர்வை துளிகள் இருந்தால் கூட,அதன் மீது ஒளிக்கற்றைகள் பட்டு தாறுமாறாக சிதறடிக்கப்பட்டால், சரியான இதயத்துடிப்பை காண முடியாது(ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவுதான்). மேலும், இதயத்துடிப்பை பார்க்கிறேன் என்கிற பெயரில் அங்குமிங்கும் ஓடி குதித்துக் கொண்டு இதயத்துடிப்பை பார்த்தாலும் பெருவாரியான மாற்றம் தெரியும்.

குறைகள்

இதன் காரணமாகவே, பெரும்பாலான ஸ்மார்ட் கைக்கடிகார நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு கீழ் அல்லது ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் இதயத்துடிப்பு பதிவு செய்யப்பட்டால், அதை “தவறான மதிப்பு” என காட்டுகிறது. உதாரணமாக, இதயத்துடிப்பு 50 க்கு கீழ் அல்லது 100க்கு மேல் இருந்தால் பெரும்பாலான ஸ்மார்ட் கை கடிகாரங்கள் தவறான இதயத்துடிப்பு என காட்டுவதோடு கைக்கடிகாரத்தை ஒழுங்காக அணியுமாறு அறிவுறுத்துகிறது.

மேலும் தரம் குறைந்த,விலை மலிவான ஸ்மார்ட் கை கடிகாரங்களில் வழங்கப்பட்டிருக்கும் உணர்வியானது, அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படாது. எனவே, இதனால் கூட இதயத்துடிப்பு மதிப்புகளில் மாற்றம் தெரியலாம்.

சில போலியான ஸ்மார்ட் கை கடிகாரங்களில், உண்மையான இதயத்துடிப்பு அளக்கும் அமைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதில்லை. இதன் காரணமாக, தனக்கு தோன்றும் ஒரு மதிப்பை கைக்கடிகாரம் காட்டிக் கொண்டே இருக்கும். நீங்கள் கைகடிகாரத்தை கழற்றி, கத்திரிக்காயின் மீது வைத்தால் கூட கத்திரிக்காய்க்கும் இதயம் இருக்கிறது என்று நிரூபித்து விடும் இந்த கடிகாரம்.

இந்த அடிப்படையிலேயே இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஆக்சிஜன் அளவு போன்றவை கூட கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த இடத்தில் நாம் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். இதுபோன்ற ஸ்மார்ட் கை கடிகாரங்கள் மருத்துவ உபகரணங்கள் அல்ல.

உதாரணமாக, இசிஜி பார்க்கக்கூடிய இயந்திரமானது உடல் முழுவதிலும் இருக்கக்கூடிய முக்கிய நரம்புகளில் மின்காந்த மாற்றங்களை கண்டறியும் வகையிலான அமைப்புகளை வைத்து, நொடிக்கு நொடி துல்லியமாக இதயத்துடிப்பை கண்டறியும். அப்படி கண்டுபிடிக்க கூடிய மருத்துவ உபகரணங்களில் கூட சிறிதளவு பிழைகள் இருக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்த பிழைகள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஆனால், சாதாரண ஒரு கைக்கடிகாரத்தில் காட்டும் இதயத்துடிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, மருத்துவ சிகிச்சையை வழங்கி விட முடியாது. அதில் துல்லியத்தன்மை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இருக்கும். இருந்த போதிலும் கூட, ஒரு சில விலகி உயர்ந்த ஸ்மார்ட் கை கடிகாரங்கள் இதய கோளாறுகளை கண்டறிந்து மருத்துவர்களுக்கு பெரிதும் உதவி இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்தது. இதில் உணர்வி அமைப்பாக வழங்கப்பட்டிருப்பது சோலார் பேனல்களில் பயன்படுத்தும் அடிப்படையிலான ஒளி மின் டையோடு தொழில்நுட்பம் தான் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. எனவே, ஒருபோதும் மருத்துவ உபகரணங்களோடு கை கடிகாரத்தில் இருக்கும் இதயத்துடிப்புமானிகளை ஒப்பிட்டு பார்ப்பது சரியாக அமையாது.

மேலும், இதயத்துடிப்பு மானிகளையும் கடந்து,தரம் குறைந்த மற்றும் முறையாக உற்பத்தி செய்யப்படாத ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அணியும்போது, அதில் இருக்கும் லித்தியம் பேட்டரிகள் வெடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பிரபலமான நிறுவன தயாரிப்பை போலவே போலியாக தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் கை கடிகாரங்கள் ,முறையான பாதுகாப்பு விதிமுறைகளை(safety standards)பின்பற்றி இருக்கிறதா? என்று உறுதி செய்வது கடினம்.

எனவே, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வாங்கும் போது முறைப்படியான நிறுவன முத்திரை கொண்ட கடிகாரங்களை வாங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், விளையாட்டாக இதயத்துடிப்பை பார்த்துக் கொள்ள மட்டும் இதன் இதயத்துடிப்பு மானியை பயன்படுத்துங்கள். ஆனால், நிச்சயம் வருங்காலத்தில் வரக்கூடிய கைக்கடிகார இதயத்துடிப்பமானிகள் தற்கால மருத்துவ உபகரணங்களுக்கு சவால் விடும் என்பதில் துளிஅளவு சந்தேகமில்லை.

வளரட்டும் எலக்ட்ரானிக்ஸ்! வளரட்டும் தொழில்நுட்பம் ! .

மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

#basicElectronics #dailyElectronics #digitalElectronics #electronics #electronicsInTamil #heartRateSensor #smartwatches

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

நாம் டைப் செய்வது கணினிக்கு எப்படி தெரிகிறது? | ASCII CODE|லாஜிக் எலக்ட்ரானிக்ஸ் சங்கமம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 43

எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம் இருந்தது. தட்டச்சு பொறிகளில் நாம் உள்ளீடை வழங்கும்போது, அந்த உள்ளீடை எப்படி கணினி புரிந்து கொள்ளும் என்று எனக்கு நீண்ட காலமாக நீடித்த ஒரு சந்தேகம் இருந்தது. சிறுவயதில் எல்லாம் தட்டச்சு பொறிக்குள் M என்றால் அதற்குள்ளும் M என்கிற வடிவத்தில் எழுத்து இருக்கும், அந்த M வடிவத்திலேயே மின்சாரம் சென்று அதற்குரிய வெளியீடு கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்தேன்.

ஆனால், அதற்கான பதிலை கடந்த கடைசி வார கல்லூரி வகுப்பில் தான் நான் தெரிந்து கொண்டேன். லாஜிக் கதவுகள் தொடர்பாக நாம் பல்வேறு கட்டுரைகளை பார்த்திருக்கிறோம். அடிப்படையில், லாஜிக் கதவுகளில் உள்ளீடுகள் பூஜ்ஜியம்(0) அல்லது ஒன்று(1) என்ற அடிப்படையில் தான் வழங்கப்படும். உண்மையில், லாஜிக் கதவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கணினிகளை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூட சொல்லலாம். அந்த வகையில் பார்க்கின்ற பொழுது, கணினிக்கு தெரிந்தது பூஜ்ஜியம் அல்லது ஒன்று மட்டும்தான்.

நீங்கள் சொல்லும் பைத்தான், ஜாவா, சி உள்ளிட்ட எந்த ஒரு மொழியும் கணினிக்கு தெரியாது. தற்கால குவாண்டம் சிப்புகள் வரை அவர்கள் பயன்படுத்துவது பூஜ்ஜியம் அல்லது ஒன்று என்னும் நிலை குறித்து மட்டும்(qubit states)தான்.

அப்படியானால், இந்த பூஜ்ஜியம் ஒன்றை மீண்டும் மீண்டும் போட்டு வைத்து தான் உள்ளீடை வழங்க முடியும். சரி ABCD அகர வரிசைக்கு என ASCII Code(American standard code for  information interchange)எனும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்களால் தட்டச்சு பொறியை கொண்டு, கணினிக்கு எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை உள்ளீடாக வழங்க முடியும்.

இதற்கான அட்டவணையை நான் வழங்குகிறேன். அந்த அட்டவணையை பாருங்கள்.அதன் பின்பு கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

என்னப்பா அட்டவணை இது! எங்கு பார்த்தாலும் எண்களும் எழுத்துக்களுமாக இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லையே என புலம்பினால் வருத்தம் வேண்டாம், எளிமையாக விளக்குகிறேன்.

100 என்கிற பைனரி எண் ஆனது ஆங்கில தலைப்பு எழுத்துக்களை(capital letters)குறிக்கிறது. இந்த பைனரி எண்ணில் தொடங்கும் மதிப்புகள், ஆங்கில தலைப்பு எழுத்துக்களுக்கான உள்ளீடுகள் என நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து வரும், நான்கு பைனரி எண்கள் ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் முதல் எழுத்து என்ன ? A தானே! அப்படியானால் 100-0001 இந்த உள்ளீடை வழங்கினால் உங்களுடைய கணிப்பொறியில்,A எனும் எழுத்து அச்சாகும். நீங்கள் ஏன் எனும் பொத்தானை அழுத்தும் போது இந்த குறியீடு தான் கணினிக்கு வழங்கப்படுகிறது. இந்த குறியீடை புரிந்து கொள்ளும் கணினி ஆனது A என்னும் எழுத்தை திரையில் காட்டுகிறது. இந்த வேலையை தான் உள்ளார்ந்த மின்கடத்திகள்(integrated chips) பார்த்துக் கொள்கிறது.

சரி ! கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கென்று ஒரு செயல்பாடு தருகிறேன். உங்களுடைய பெயரை மேலே இருக்கின்ற அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, எழுதி என்னுடைய மின்மடல் முகவரிக்கு(email )அனுப்புங்கள். அத்தோடு, இந்த கட்டுரை குறித்த உங்களுடைய கருத்துக்களையும் அனுப்புங்கள். அவ்வாறு அனுப்புபவர்களின் பெயர்களை, அடுத்த கட்டுரையில் தவறாமல் குறிப்பிடுகிறேன். எப்படி எழுத வேண்டும் என்று கேட்கிறீர்களா?

உதாரணமாக, SRI என்றால் 101-0011 101-0010 100-1001 என்று எழுத வேண்டும். அதற்காக இணைய கருவிகளை பயன்படுத்தக் கூடாது. முயற்சித்துப் பாருங்கள் எல்லாம் ஒரு பயிற்சிதான். இதை மற்றும் கற்றுக் கொண்டால் உங்கள் நண்பர்களுக்கு மத்தியில் ரகசிய குறியீட்டு மொழியில் பேசிக்கொள்ளலாம்.

நாம் முன்பே ரிமோட் கருவிகள் எப்படி வேலை செய்கிறது? என்று ஒரு கட்டுரையில் பார்த்திருக்கிறோம். அங்கு அகச்சிவப்பு நிற ஒளி கதிர்களை விட்டு விட்டு  அனுப்பும் போது,அதைப் பெற்றுக் கொள்ளும் உணர்வியானது(receiver )அதற்குரிய செயல்பாடை செய்கிறது.

அதேபோல, இங்கு விட்டு விட்டு மின்னழுத்தத்தை வழங்கும்போது அதற்குரிய செயல்பாடானது கணினியில் மேற்கொள்ளப்படுகிறது. இவை அனைத்தும் நாம் கண்ணிமைக்கும் நேரப் பொழுதுக்குள் நடந்து விடுவதால், அன்றாட வாழ்வில் நம்மால் இதை உணர முடிவதில்லை. ஒருவேளை, இதே உள்ளீடை நீங்கள் வழங்க வேண்டும் என்று நினைத்தால் கூட, மிகக் குறுகிய நேரத்திற்குள் நீங்கள் வெளியிலிருந்து ஏழு சசுவிட்ச்களைக் கொண்டு வழங்கினால் உங்களாலும் கணினித்திரையில் A என்னும் எழுத்தை பார்க்க முடியும்.

அடிப்படையில் கணினிகள் இயங்குவது இப்படி தான். அடுத்த முறை லினக்ஸ் முனையத்தில் கட்டளைகளை பிறப்பிக்க கீபோர்டை தட்டும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீ போர்டு என்பதும் விட்டு விட்டு வேலை செய்யக்கூடிய  சுவிட்சுகள் தான். சரி லாஜிக்கல் அடிப்படையில் கீபோர்டுகள் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்துவிட்டோம். எலக்ட்ரானிக் அடிப்படையில் கீபோர்டு கருவிகள் எப்படி வேலை செய்ய முடியும்.

இவ்வாறு வழங்கப்படும் உள்ளீடுளானது கீ போர்டுகளுக்குள்ளேயே அதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக PCB board மூலம் பெறப்பட்டு அதற்குள்ளே வழங்கப்பட்டிருக்கும் உள்ளார்ந்த மின்சுற்றால் பரிசீலிக்கப்பட்டு கணினிக்கு அனுப்பப்படும். கணினியானது இந்த குறியீடை பயன்படுத்தி அதற்குரிய செயல்பாடு இயக்கும்.

ஆனால், இந்த குறியீட்டு முறையானது தற்காலத்தில் பெருமளவில் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. ஆம்  தற்கால தொழில்நுட்பத்தில் நிறுவனங்களுக்கு ஏற்றால் போல் கூட இந்த குறியீடுகள் பயன்படுத்தப்படுவதை அறிய முடிகிறது. மேலும், இணையத்தில் தேடும்போது பல்வேறு விதமான குறியீடு அட்டவணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேற்படி நான் வழங்கியிருக்கும் குறியீடு அட்டவணையானது என்னுடைய பாடப்புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் தேடி பார்க்கும்போது வெவ்வேறு விதமான குறியீட்டு அட்டவணைகளும் உங்களுக்கு காணக் கிடைக்கிறது.

எனவே குறிப்பிட்ட இந்த குறியீடு தான் என்று நிச்சயத்து சொல்ல முடியாவிட்டாலும்,அடிப்படையில் பைனரி எண்களின் தொகுப்பின் மூலமே தட்டச்சு பொறிகள் இயங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் கீ போர்டுகளுக்குள் தாமிர முலாம் பூசப்பட்ட மிகச்சிறிய பட்டைகளும் வழங்கப்பட்டிருக்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பட்டனை அமர்த்தும்போது, அதன் ஊடே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டளைகள் கணினிக்கு கடத்தப்படுகிறது.

இதே போல, தமிழ் மொழி உள்ளிட்ட இன்ன பிற மொழிகளுக்கும் குறியீடுகள் இருக்கின்றன. அந்தந்த குறியீடுகளுக்கு ஏற்றார் போல் நாம் உள்ளீடுகளை வழங்கும்போது கணினி திரையில் தோன்றும். எனவே, A என்கிற பட்டனை தட்டுவதால் மட்டும் அல்ல அதற்குரிய குறியீடு வழங்குவதால் தான் அந்த உள்ளீடு கணினிக்கு செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆனால், தற்கால செய்யறிவு யுகத்தில் நாம் எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது. ஆனாலும், கணினி மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பத்தில் பூஜ்ஜியம் மற்றும் ஒன்று இன்றி எதுவும் இல்லை.

இந்த இடத்தில் வெறும் இரண்டே வாய்ப்புகள் மட்டும் தான், ஒன்று நீங்கள் ஓட வேண்டும் (1) அல்லது ஓய (0) வேண்டும்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

#asciiCode #basicElectronics #dailyElectronics #digitalElectronics #electronics #keyboards #logicGates #logicSystems

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்து வருகிறோம். தற்கால கணினி மற்றும் மொபைல் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது USB (யு.எஸ்.பி)என அழைக்கப்படும் universal serial Bus தொழில்நுட்பம் தான்.

1995 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்,IBM உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் இணைந்து யு.எஸ்.பி தொழில்நுட்பத்தை வடிவமைக்க தொடங்கியது. இதன் பயனாக, 1996 ஆம் ஆண்டு usb தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் version ஒன்று தொடங்கி இப்பொழுது நான்கு வரை காணக் கிடைக்கிறது(Usb version 1 to 4).

இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதன் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால், அனைத்து விதமான கருவிகளிலும், ஒரே விதமான இணைப்பு முறையை பயன்படுத்துவது மற்றும் தரவுகள், மின்சாரம் ஆகிய அனைத்தையும் ஒரே இணைப்பு வடத்தின் மூலமாக கொண்டு செல்வது போன்றவை அடிப்படையாக கவனத்தில் கொள்ளப்பட்டன(universal connecting as well as  data and current transfer) .

தற்காலத்தில் யுஎஸ்பி தொழில்நுட்பமானது, பல்வேறு வகையில் மாற்றங்களை சந்தித்து இருக்கிறது type A,B,C என பலவகையாக usb தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த தொழில்நுட்பத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் usb கேபிள்களை பயன்படுத்தி உங்களால் தரவுகளைப் பகிர முடியும், இணைப்பை வழங்க முடியும், அதே நேரம் மின்சாரத்தையும் கடத்த முடியும்.

தற்காலத்தில் பழமையான யுஎஸ்பி இணைப்புகள், டைப் சி வகையிலான இணைப்புகளின் மூலம் பதிலீடு செய்யப்பட்டு கொண்டு வருகிறது(Type C is replacing traditional USB). ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகளாவிய நாடுகள், டைப் சி தொழில்நுட்பத்திற்கு மாற தொடங்கியிருக்கின்றன.ஆனால், இதுவும் ஒருவகையில் usb-யின் கடைக்குட்டி தான்.

இந்த தொழில்நுட்பத்திற்கு பின்னால் பல்வேறு விதமான விந்தைகள் ஒழிந்து இருக்கிறது. ஆனால், நாம் அடிப்படையாக இந்த யுஸ்பி கேபிள்-ஐ வெட்டிப் பார்த்தால், நான்கே நான்கு நிற ஒயர்கள்(wires )மட்டும்தான் உங்கள் கண்களில் படும்..

இதில் சிவப்பு மற்றும் கருப்பு நிற இணைப்பு வடங்கள் முறையே ஐந்து வோல்ட் மற்றும் தரை இணைப்பிற்கு(Ground )பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில், வெளியாக கூடிய சில யுஎஸ்பி கேபிள்கள் அதிகப்படியான வோல்டேஜ் மின்சாரத்தை கூட தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. ஆனாலும், பரவலாக பயன்படுத்தப்படும் யு எஸ் பி வடங்களில், உங்களுக்கு 5volt மின்னழுத்தத்தை பராமரிக்கும் வகையிலேயே தயாரிக்கப்படுகிறது.

சரி இந்த ரெண்டு wire களையும் விட்டுவிடுவோம். அதற்குள்ளே இன்னும் இரண்டு நிற ஒயர்கள் உங்களுக்கு காண கிடைக்கும்.அவை தான் வெள்ளை மற்றும் பச்சை. இவைதான் மிக மிக முக்கியமானவை. இந்த வெள்ளை வடமானது உங்களுக்கு தரவுகளை பெறுவதற்கு பயன்படுகிறது(Data+). அதேநேரம் பச்சை வடத்தின் மூலம், உங்களால் தரவுகளை கடத்த முடியும்(data-). அதனால்தான், ஒரே யுஎஸ்பி கேபிள் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் உங்களால் தரவுகளை அனுப்பவும் முடியும், தரவுகளை பெற முடியும். கேட்பதற்கு ஏதோ எளிமையாக இருக்கலாம்.ஆனால், அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி கவனிக்க தவறும் ஒரு மிக முக்கியமான அம்சம் இது.

அந்த காலத்தில் எல்லாம் ஒயர்களின் வழியாக மின்சாரத்தை மட்டுமே அனுப்ப முடியும் என நினைத்துக் கொண்டிருந்த நமக்கு ,விந்தைகளைக் கொண்டு வந்து சேர்த்தது இந்த usb கேபிள். என்றும் கூட எச் டி எம் ஐ (HDMI),வி ஜி ஏ (VGA)போன்ற கேபிள்களை பயன்படுத்துகிறோம்.ஆனால், இவற்றில் இன்றளவும் மின்சாரத்தை கடத்த முடியாது. சரி டைப் சி தொழில்நுட்பத்தில், அப்படி என்னப்பா சிறப்பு இருக்கிறது? என்று கேட்டால் usb யை விடவும் டைப் சி சற்றே முன்னேறியது. டைப் சி தொழில்நுட்பத்தில், உங்களால் இன்னும் சிறப்பாக மின்சாரத்தையும் அதே நேரம் தரவுகளையும் பகிர முடியும்.

என்னதான் யுஎஸ்பி தொழில்நுட்பம் தரவுகளைப் பரப்ப,பகிர சிறப்பாக அமைந்தாலும் இங்கே சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, என்னதான் ஏவி(AV )கேபிள், எச்டிஎம்ஐ(HDMI) கேபிள் களை போல இதனாலும் செயலாற்ற முடிந்தாலும், உடனுக்குடன் செட்டாப் பாக்ஸில் இருந்து தொலைக்காட்சிக்கு தரவுகளை கடத்துவதற்கு usb உகந்த தொழில்நுட்பம் அல்ல.

மேலும் அன்பு நண்பர்கள் வெளியூருக்கு பயணிக்கும் போது, தெரியாத இடங்களில் உங்களுடைய மொபைல் கருவிகளை சார்ஜ் செய்ய நேரிட்டால், அதற்காக வெறும் மின்சாரத்தை மட்டும் கடத்தும் யுஎஸ்பி(charging only usb cable) வடங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்! உங்களுடைய usb வடத்தை வைத்து உங்களுடைய தரவுகளை மிக எளிமையாக திருட முடியும். இன்றளவில் நடத்தப்படக்கூடிய பெரும்பாலான தொழில்நுட்ப தகவல் திருட்டுகளுக்கு, இந்த யுஎஸ்பி வடங்களும் ஒரு மிக முக்கிய காரணம்.

மேலும், என்னதான் மிகக் குறைவான மின்னழுத்தம் வெளிப்பட்டாலும், இது போன்ற யுஎஸ்பி வடங்களை குழந்தைகளிடம் கொடுப்பதை தவிருங்கள்.இத்தகைய usb வடங்களை பற்களால் கடித்த குழந்தைகள் மின்னதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்திகளை கூட நான் பலமுறை கவனித்திருக்கிறேன். என்னதான் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், எலக்ட்ரானிக் கருவிகளையும் கவனமாக கையாள வேண்டியது முக்கியமானது.

மேலும் தரம் குறைந்த usb கேபிள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ISI certificate போன்ற முத்திரை கொண்ட, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த usb கேபிள்களை மட்டும் வாங்கவும். தரம் குறைந்த கேபிள்கள், எளிதில் அறுந்து விட வாய்ப்பு இருப்பதோடு, மின்னதிர்ச்சி,தீப்பிடித்தல் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படலாம். மேலும், உங்களுடைய மொபைல் பேட்டரிக்கும் அது உகந்ததாக அமையாது.

அதுபோல, ஏற்கனவே அறுந்து போன யுஎஸ்பி கேபிள்களை கண்டபடி ஒட்டவைத்து பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும், மேலும் சிலர் ஒட்ட வைக்கிறேன்! என்கிற பெயரில் டேட்டாவை கடத்தும் வடத்தையும், மின்சாரத்தை கடத்தும் வடத்தையும் தெரிந்தும் தெரியாமல் இணைத்து விடுவார்கள். இதனால், உங்கள் மொபைல் போனில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், இது போன்ற யுஎஸ்பி கேபிள்களில் என்னதான் வெப்ப காப்பு(heat resistive )நடவடிக்கைகள் செய்யப்பட்டாலும், இத்தகைய கேபிள்கள் அருந்துவிட்டது, என்றால் அவற்றை பயன்படுத்தாது முறைப்படி அப்புறப்படுத்துவது நல்லது. அதை விடுத்து, மேலே டேப்பை சுற்றி பயன்படுத்தும் போது, வெப்பத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, தரம் குறைந்த usb கேபிளாக இருந்தால் பிரச்சனை அதிகமாக கூடும்.

இவை அனைத்தையும் நான் கவனித்த அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறேன். ஏனெனில், பல தருணங்களில் வருமுன் காப்பது சாலச்சிறந்தது.

அன்பு நண்பர்கள் ஒரு புதுவித தொழில்நுட்ப தகவலை எளிமையாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/what-is-inside-the-usb-cable/

#basicElectronics #dailyElectronics #electronics #USB

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் குறித்து பார்த்திருக்கிறோம். குறிப்பாக சமீபத்தில் தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். ஆனால் இந்த தொடுதிரை(Touch screen)தொழில்நுட்பமானது, இன்றளவும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

அடிப்படையில் தொடுதிரை என்பது விலை உயர்ந்தது மற்றும் எளிதில் சேதம் அடையக் கூடியது. கணினி மற்றும் தொலைக்காட்சி பற்றி போன்றவற்றிற்கு தொடுதிரைகள் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை. தற்காலத்தில் வெளியாக கூடிய, கணினி திரைகளில்(Monitors amd displays)கூட பெரும்பாலும், தொடுதிரைவசதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. மாறாக, சுட்டி என அழைக்கப்படும் மௌசுக்கு(Mouse) தான் மவுசு அதிகம்.

பார்ப்பதற்கு எலி போல இருப்பதால் இதற்கு மௌஸ் என பெயர் வைத்து விட்டார்கள்! என்று பல்வேறு கதைகள் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், இதற்குப் பின்பு இருக்கக்கூடிய தொழில்நுட்பம் சற்று சுவாரசியமானது.

வழக்கம் போல இதற்குள்ளும் ஒரு உள்ளார்ந்த மின்சுற்றுதான்(Integrated circuit )அமைக்கப்பட்டிருக்கும். சில மின்தடைகள்(Resistors) மற்றும் மின் தேக்கிகளை(Capacitors) கொண்டு போதியமான அளவு மின்னழுத்தம் மற்றும் மின்சாரமானது பராமரிக்கப்படும். அதற்குப் பின்பாகத்தான், இதன் செயல்முறை வடிவமானது வெளிப்படுகிறது. ஒரு பந்து போன்ற அமைப்பு(rolling ball)இருக்கும். இந்த பந்து போன்ற அமைப்புதான் நாம் அனைத்து இடங்களில் நகர்த்தும்போதும் அதற்கு ஏற்றார் போல சுட்டியை நகர்த்துகிறது.

சரி நாம் சுட்டியை நகர்த்துவதை எப்படி கணினி புரிந்து கொள்கிறது. நீங்கள் சுட்டியை திருப்பி வைத்து பார்த்தால் பின்னாடி ஒரு விளக்கு எறிவது போல தெரியும்(Thats actually IR beam). தற்போது வெளியாக கூடிய சுட்டிக்களில் led பல்பு போல ஒரு சிறிய அமைப்பு மட்டுமே இருக்கும். ஆனால் அதில் எரியக்கூடிய விளக்கு பெரும்பாலும் தெரிவதில்லை(Invisible IR). பழைய வடம் இணைக்கப்பட்ட சுட்டிகளில்(Wired mouses)உங்களுக்கு ஒரு சிவப்பு நிற விளக்கு எரிவது தெரியும். நான் ரிமோட்டுகள் குறித்த கட்டுரையில் முன்பே குறிப்பிட்டிருந்தது போல தான் நாம் சுட்டியை நகர்த்தும்போது, இந்த விளக்கில் இருந்து வரும் வெளிச்சம் மாறுபடுகிறது, காரணம் சுட்டிக்கு பின்னால் நகர்த்தும்போது அதனோடு சேர்ந்து நகரக் கூடிய வகையில் ஒரு சுருள் அமைப்பு போல(wheel mechanism) வைக்கப்பட்டிருக்கும்.

இது நகரும்போது வெளிச்சத்தை மறைக்கும் பின்பு வெளிவிடும், பின்பு மறைக்கும் பின்பு வெளிவிடும்(it’ll block and allow light when movement). இதன் மூலமே இயக்கம் கண்டறியப்படுகிறது. மேலும் இந்த வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக ஒளிமின் டையோடுகளும்(Receivers – photo voltaic cell)பொருத்தப்பட்டு இருக்கும். இந்த ஒளிமின் டையோடுகளில் மாறி மாறி வெளிச்சம் பட்டும்,படாமலும் இருப்பதை வைத்து சுட்டு இயக்கத்தில் இருப்பதை கண்டுபிடித்துக்கொள்ளலாம். மேலும், இந்த ஒளி எந்த வகையில் பட வேண்டும், என்பதற்காக சிறிய கண்ணாடி போன்ற ஒரு வழிகாட்டி(light guide)அமைப்பும் இருக்கும்.

கேட்பதற்கு சற்றே குழப்பமாக இருந்தால் கீழே வழங்கி இருக்கும் புகைப்படத்தை பாருங்கள் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

ஆனால், தற்காலத்தில் வரக்கூடிய சுட்டிகளில் இது போன்ற பந்து போன்ற அமைப்புகள் இல்லாத வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.

அத்தகைய சுட்டிகள் எப்படி வேலை செய்கிறது என்று உங்களுக்குள் குழப்பம் இருக்கலாம். மோஷன் சென்சார் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பொருள் நகர்வதை வைத்து அதன் இயக்கத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த இடத்தில் led விளக்கு மட்டுமே இந்த வேலையை பார்த்துக் கொள்வதால் இந்த அடிப்படையில் இயங்கக்கூடிய சுட்டிகளும் உங்களுக்கு காண கிடைக்கும்.

அதற்குப் பிறகு என்ன சுட்டியில் ஒவ்வொரு இடமாக நகர்த்துவதற்கு மேலே உருட்டும் சக்கரம் போன்ற ஒரு அமைப்பு காணப்படும்.இரண்டு பக்கமும் கிளிக் செய்வதற்கு வசதியாக இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தற்கால சுட்டிகளில்,Latency என்னும் ஒரு வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் வைத்திருக்கும் சுட்டியின் Lattency மதிப்பானது ஆயிரம்(1000) என வைத்துக் கொள்வோம்.அதாவது உங்கள் கையில் இருக்கும் சுட்டியானது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக தகவல்களை வழங்கக்கூடியது. இதுவே வீடியோ கேம் விளையாடும் சுட்டிகளில் இந்த மதிப்பானது லட்சங்களை கூட தாண்டும். அப்போதுதான் வீடியோ கேம் விளையாட்டில் எதிரி உங்களை சுட வரும்போது உடனடியாக நகர்ந்து அவரின் மீது குறி வைக்க முடியும்.

இதுபோன்ற சுட்டிகள் பெரும்பாலும் பேட்டரிகளின் மூலமே மின்னாற்றலை பெற்றுக் கொள்கிறது. இவை இயங்குவதற்கு மிகக் குறைவான மின்னாற்றலே போதும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால், நான் முன்பு குறிப்பிட்ட வீடியோ கேமுக்கு ஏற்ற சுட்டிகளுக்கு உங்களுக்கு அடிக்கடி பேட்டரிகளை மாற்ற வேண்டிய தேவை இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் எந்த அளவிற்கு ஒரு எலக்ட்ரானிக் பொருளின் செயல் திறன் சிறப்பாக இருக்கிறதோ! அதற்கு ஏற்றார் போல நாம் மின் ஆற்றலையும் அதிகமாக வழங்க வேண்டியிருக்கும். அதற்கு ஏற்றார் போல மின்ஏற்றம்(Rechargeable )செய்யக்கூடிய வகையிலான சுட்டிகளும் மார்க்கெட்டுகளில் கிடைக்காமல் இல்லை.

இந்தச் சுட்டியின் சமிக்ஞைகள் அனைத்தும் உள்ளே வழங்கப்பட்டிருக்கும், உள்ளார்ந்த மின்சுற்றின் மூலம் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் கணினிக்கு கடத்தப்படுகிறது. இந்த கடத்தப்படும் வேலை இரண்டு வகையில் நடைபெறும் ஒன்று நீங்கள் வைத்திருக்கக்கூடிய சுட்டி வயர் அல்லது வயர்லெஸ் அடிப்படையிலானதாக இருக்கும்

அதாவது ப்ளூடூத் தொழில்நுட்பத்தோடு அல்லது அதற்கென வழங்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய பென் டிரைவ் போன்ற tongle அமைப்பு மூலமோ தரவுகள் கடத்தப்படும். வழக்கமான, கம்பி வட வகையில் வழங்கப்பட்டிருக்கும்(wired)வடத்தின் மூலமாக தரவுகள் உடனுக்குடன் கணினிக்கு கடத்தப்படும்.

உள்ளே பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஆப்டிகல் எல்இடி எலக்ட்ரானிக் பொருட்கள், உள்ளார்ந்த மின்சுற்று மற்றும் இன்ன பிற பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுட்டியின் விலையும் அமையும். தற்காலத்தில் குறைந்தபட்சம் 80 ரூபாயில் தொடங்கி 8000 ரூபாய்க்கு கூட சர்வ சாதாரணமாக சுட்டிகள் கிடைக்கிறது.

ஆனால், கணினியை எளிமையாக பயன்படுத்துவதற்கு ஒரு இன்றியமையாத கருவி இந்தச் சுட்டி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தக் கட்டுரையில் சுட்டியின் அடிப்படையான செயல்முறை குறித்து மட்டுமே நான் விளக்கி இருக்கிறேன். அடுத்த முறை சுட்டியை எடுத்து டிக் டிக் டிக் என தட்டும் போது அதன் பின்னால் இருக்கும் அறிவியலையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-computer-mouse-works-in-tamil/

#basicElectronics #dailyElectronics #mouseInTamil

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான லாஜிக்கல் கதவுகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைக்கு நாம் பார்க்க இருக்கிற கதவு,NOR லாஜிக் கதவு.

நாம் ஏற்கனவே பார்த்திருந்த, ஓர் கதவின் தலைகீழி வகையான லாஜிக் கதவு தான் இந்த NOR கதவாகும். மேலும், இந்த கதவில் எவ்வித உள்ளீடும் வழங்கப்படாத போது மட்டுமே உங்களுக்கு வெளியீடு கிடைக்கும்(If both the inputs are zero, then only you’ll get the output).

நாம் ஏற்கனவே பார்த்திருந்த OR கதவில், உங்களுக்கு ஏதேனும் ஒரு உள்ளீடு உண்மையாக இருக்கும்போது(In OR gate if atleast one input is 1 you’ll get the output) வெளியீடு கிடைக்கும். ஆனால் இந்த கடவுள் ஏதேனும் ஒரு உள்ளீடு உண்மையாக இருந்தாலும் உங்களுக்கு வெளியீடு கிடைக்காது.

மேலும், இந்த NOR கதவை கொண்டு இன்ன பிற அனைத்து விதமான லாஜிக் கதவுகளையும் உங்களால் உருவாக்கிவிட முடியும். கேட்பதற்கே சற்று ஆச்சரியமாக இருக்கலாம், NAND மற்றும் NOR ஆகிய இரண்டு கதவுகளுமே யூனிவர்சல் லாஜிக் கதவுகள்(universal gates)என அறியப்படுகிறது.

எனவே, இந்த லாஜிக் கதவுகளைக் கொண்டு உங்களால் இன்ன பிற அனைத்து விதமான லாஜிக் கதவுகளையும் கட்டமைத்து விட முடியும். அது குறித்து வரும் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

IC 7402 ஐ வாங்குவதன் மூலம் உங்களுக்கு பொதுவான இரண்டு உள்ளீடு நாற்கதவு(two input nor gate)கிடைக்கும். இந்த நாற்கதவை கொண்டும் பல்வேறு விதமான லாஜிக்கல் சுற்றுக்களை அமைக்க முடியும். மேலும், இந்த நாற்கதவில் மட்டும் உங்களுக்கு ஒன்றாவது இணைப்பில் இருந்து வெளியீடு கிடைக்கும் 2 மற்றும் 3 இணைப்புகள் முறையே உள்ளீடாக அமையும். இன்ன பிற வகையிலான லாஜிக் கதவுகளில் ஒன்று மற்றும் இரண்டு உள்ளியதாகவும் மூன்றாவது இணைப்பு வெளியிடாகும் அமையும் என்பது நாம் அறிந்ததே.

அதற்கான விளக்கப்படமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த NOR கதவானது போக்குவரத்து விளக்குகள்,தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்ற பல்வேறு விதமான துறைகளில் அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அறிந்தும் அறியாமலேயே அன்றாட வாழ்வில் NOR கதவுகளை பயன்படுத்துகிறோம்.

இந்த NOR க்கதவுகளுக்கான சுவிட்சிங்(Switching) மின் சுற்று கீழே வழங்கப்பட்டுள்ளது.

இந்த NOR கதவுக்கான டையோடு அடிப்படையிலான மின்சுற்று(Diode circuit)வழங்கப்பட்டுள்ளது.

இந்த NOR கதவுக்கான பூலியன் இயற்கணித அட்டவணையானது கீழே வழங்கப்பட்டுள்ளது.

அவ்வளவுதான் இன்றைக்கு ஒரு லாஜிக் கதவு குறித்து அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/nor-gate-in-tamil/

#basicElectronics #digitalElectronics #electronics #logicGates

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S

Basic Electronics for the Amateur Radio Operator: What You Need to Know for Your Technician License

1,003 words, 5 minutes read time.

If you’re preparing for the Amateur Radio Technician License Exam, understanding basic electronics is a must. While you don’t need to be an electrical engineer, the exam includes fundamental concepts like Ohm’s Law, circuits, components, and RF safety. This guide will walk you through the essential topics, ensuring you’re ready for the test and your first steps as a ham radio operator.

Understanding Electricity: The Basics for Amateur Radio

Electricity is the movement of electrons through a conductor, like a wire. Three key electrical properties define how electricity behaves:

  • Voltage (V) is the force that pushes electrons through a circuit. It’s measured in volts (V).
  • Current (I) is the flow of electrons, measured in amperes (A).
  • Resistance (R) opposes the flow of electricity and is measured in ohms (Ω).

These three are tied together by Ohm’s Law, a fundamental equation in electronics:

V=I×R

This means if you know any two values, you can calculate the third. Understanding this equation is critical for both the exam and real-world troubleshooting.

Direct Current (DC) vs. Alternating Current (AC)

Electricity comes in two forms:

  • Direct Current (DC) flows in one direction. Batteries and solar panels produce DC.
  • Alternating Current (AC) changes direction many times per second. Household electricity is AC because it’s more efficient for transmission over long distances.

For amateur radio, most equipment runs on DC power, but you’ll also need to understand AC because radio signals are alternating currents that oscillate at high frequencies.

Essential Electronic Components and Their Functions

Several key electronic components appear on the Technician Exam. Here’s what they do:

  • Resistors limit current flow.
  • Capacitors store and release energy, often used in filtering circuits.
  • Inductors store energy in magnetic fields and are important in tuning circuits.
  • Diodes allow current to flow in only one direction, useful in rectifier circuits that convert AC to DC.
  • Transistors act as switches and amplifiers in radio circuits.

Understanding these basics helps you answer questions about circuit behavior and troubleshooting.

Series and Parallel Circuits

Circuits are made up of components arranged in either series or parallel:

  • In a series circuit, current flows through all components one after another. The same current passes through each, but the voltage is divided.
  • In a parallel circuit, components share the same voltage, but the current divides among them.

For the exam, you should know how voltage, current, and resistance behave in each type of circuit. For example, total resistance in a series circuit is the sum of all resistances, while in parallel circuits, total resistance is lower than the smallest individual resistor.

Basic AC Concepts and Frequency

Radio waves are AC signals that oscillate at different frequencies. Frequency (f) is measured in hertz (Hz) and tells us how many times per second the wave changes direction. One kilohertz (kHz) is 1,000 Hz, and one megahertz (MHz) is 1,000,000 Hz.

Ham radios operate in different frequency bands, such as:

  • VHF (Very High Frequency): 30 MHz – 300 MHz (e.g., 2-meter band)
  • UHF (Ultra High Frequency): 300 MHz – 3 GHz (e.g., 70-centimeter band)

Higher frequencies allow for shorter antennas and are good for local communication, while lower frequencies travel further.

Modulation: How We Send Information Over Radio Waves

Modulation is how a radio wave (carrier wave) carries information. The Technician Exam covers three main types:

  • Amplitude Modulation (AM): The signal strength (amplitude) changes with the voice signal.
  • Frequency Modulation (FM): The frequency of the wave changes to encode information. FM is more resistant to noise and is commonly used in VHF and UHF bands.
  • Single Sideband (SSB): A variation of AM that uses less bandwidth and is more efficient for long-distance communication.

Knowing these helps when selecting modes for different types of contacts.

Power, Batteries, and Safety

Most ham radios run on 12V DC power sources, such as batteries or regulated power supplies. It’s important to understand:

  • Battery safety: Overcharging or short-circuiting batteries (especially lithium-ion) can be dangerous.
  • Fuse protection: Many radios have built-in fuses to prevent excessive current draw.

Another key topic on the test is RF exposure safety. High-power transmissions can generate strong radio frequency (RF) radiation, which may cause health risks. To minimize exposure:

  • Maintain a safe distance from transmitting antennas.
  • Use the lowest power necessary for effective communication.
  • Follow FCC RF exposure limits for your frequency and power level.

Ohm’s Law in Real-World Ham Radio Applications

A common exam question might involve calculating current or voltage using Ohm’s Law. For example:

Question: If a radio operates at 12V and draws 2A of current, what is the resistance?

Using Ohm’s Law:

Understanding these calculations can help with troubleshooting and designing circuits.

Final Thoughts: Studying for the Exam and Beyond

The Technician License Exam covers these topics, but learning electronics doesn’t stop there. Once licensed, you’ll continue exploring concepts like antenna design, signal propagation, and digital communication.

Great resources for studying include:

  • ARRL’s Technician Class License Manual: The official guide with explanations and practice questions.
  • HamStudy.org: Free practice tests and flashcards.
  • QRZ.com Practice Exams: Simulated tests with real exam questions.

By mastering these basic electronics concepts, you’ll be well on your way to passing the exam and starting your journey in amateur radio. Keep practicing, get hands-on experience, and soon, you’ll be making contacts on the air!

D. Bryan King

Sources

Disclaimer:

The views and opinions expressed in this post are solely those of the author. The information provided is based on personal research, experience, and understanding of the subject matter at the time of writing. Readers should consult relevant experts or authorities for specific guidance related to their unique situations.

Related Posts

Rate this:

#ACVsDC #am #AmateurRadio #amateurRadioEducation #amateurRadioTraining #antennaTheory #ARRLStudyGuide #basicElectronics #beginnerHamRadio #capacitors #circuits #current #diodes #electricalComponents #electronicsBasics #examPrep #FCCExam #FM #hamExam #hamLicense #hamOperator #hamRadio #hamRadioBands #hamRadioBeginner #hamRadioComponents #hamRadioEquipment #hamRadioOperator #hamRadioStudy #HamRadioStudyGuide #HamRadioTraining #hamStudyGuide #inductors #modulation #OhmSLaw #powerSupply #radioBroadcasting #radioCommunication #radioFrequencies #radioFrequency #radioFundamentals #RadioLicensing #radioSignals #RadioTechnology #radioTransmission #radioWaves #resistance #resistors #RFExposure #RFSafety #SSB #technicianClass #TechnicianLicense #transistors #UHF #VHF #voltage

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான அன்றாட எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் குறித்து நாம் விவாதித்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவியானது, நம் அன்றாட வாழ்வில் மிக மிக முக்கியமானது. நாம் அடிக்கடி மறக்கக்கூடிய, பேட்டரி வாங்கி போட சோம்பேறித்தன படக்கூடிய அனைவர் கைகளிலும் அன்றாடம் புழங்கும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கருவி தான் ரிமோட்(Remote control).

வீட்டில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என அறிந்து கொள்வதற்கு யார் கையில் அதிக நேரம் ரிமோட் இருக்கிறதோ! அவர்தான் செல்வாக்கு மிக்கவர் என்ற ஒரு கருத்தும் கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக நிலவியது. பின்பு மொபைல் கருவிகளின் அசுர வளர்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சி துறை சற்று டல்லாக தான் போய்க்கொண்டிருக்கிறது.

இருந்தாலும், டிவி ரிமோட்டு களுக்காக அனுதினம் பல குடும்பங்களிலும் உலகப் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வேடிக்கைகள் மறுபுறம் இருக்கலாம். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் கண்டுபிடிப்புகளிலேயே மிக மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக டிவி ரிமோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

குடும்பங்களில் நடக்கும் உலகப் போர் மட்டுமல்ல! உண்மையில் இந்த ரிமோட் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணமே இரண்டாம் உலகப்போர் தான். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நேசப்படைகளை தாக்குவதற்காக அச்சு நாடுகள் அகச்சிவப்பு  ஒளி அலைகளைக் கொண்டு  வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் தொழில்நுட்பத்தை தயாரித்து அதை கப்பல்களில் பொருத்தி நேசநாட்டு படை கப்பல்களை வீழ்த்தி இருப்பதாக வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அகச்சிவப்புக் கதிர்களை மீண்டும்,மீண்டும் எரிய வைத்து அதை சமிக்ஞைகளாக மாற்றி அனுப்புவதன் மூலம், அதற்குரிய ரிசீவர் அலைகளை ஏற்று அதற்குரிய செயலை செய்து விட முடியும்.

இதை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அந்த கோபுரத்தில் இருக்கக்கூடிய சிவப்பு,மஞ்சள்,பச்சை நிற விளக்குகளை எரிய வைப்பது தான் உங்களது வேலை. நான் கோபுரத்தின் கீழே நின்று கொண்டிருக்கிறேன். நான் இங்கிருந்து சொல்வது உங்கள் காதுகளுக்கு வந்து சேராது. அதற்கு பதிலாக என் கையில் இருக்கும் ஒரு டார்ச் லைட்டை ஒருமுறை எரிய வைத்து அனைத்தால்,சிவப்பு விளக்கை போட வேண்டும்.இரண்டு முறை எறிய வைத்து அணைத்தால் மஞ்சள் விளக்கு போட வேண்டும். மூன்று முறை அணைய வைத்து அணைத்தால் பச்சை விளக்கை போட வேண்டும் என்று முன்பே உங்களிடம் சொல்லி வைத்து விடுகிறேன். புற சூழல்களுக்கு ஏற்ப எந்த விளக்கை போட வேண்டுமோ அதற்கு ஏற்ற சமிக்ஞையை டார்ச் லைட் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை பார்த்து அதற்குரிய விளக்கை போடுகிறீர்கள்.

இங்கே நான்தான் ட்ரான்ஸ்மிட்டர்(Transmitter)நீங்கள்தான் ரிசீவர்(Receiver). நான்தான் ரிமோட் கருவி, நீங்கள் தான் தொலைக்காட்சி பெட்டி. படிப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும்,எளிமையாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். அகச்சிவப்பு ஒளிகளை பூஜ்ஜியம், ஒன்று என மாற்றி மாற்றி சமிக்ஞைகளாக அனுப்பும் போது, அதை புரிந்து கொள்ளக்கூடிய தொலைக்காட்சியில் இருக்கும் ரிசீவர்கள் அதற்கு ஏற்றவாறு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுகிறது. நம்முடைய டிவி ரிமோட்டுகளில் ஒரு சிறிய பல்பு போல இருக்கும். ஆனால் எவ்வளவுதான் பட்டனை மாற்றி மாற்றி அழுத்தினாலும் அதிலிருந்து வெளிச்சம் வராது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!உண்மையில் அதிலிருந்து வரக்கூடிய அகச்சிவப்பு ஒளிக்கதிர்களை உங்கள் வெறும் கண்களால் பார்க்க முடியாது.

உங்கள் கையில் இருக்கும் மொபைல் போன் கேமராவை ஆன் செய்துவிட்டு, கேமராவுக்கு நேராக வைத்து ரிமோட்டில் இருக்கும் பட்டன்களை தட்டினால் உங்களால் அகச்சிவப்பு நிற கதிர்களை பார்க்க முடியும். இதை வைத்து உங்களுடைய பழைய ரிமோட்டில் பேட்டரி இருக்கிறதா? அல்லது அதை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டதா? என்று கூட புரிந்து கொள்ளலாம்.

மற்றபடி இந்த சமிக்ஞைகளை முறையாக அனுப்புவதற்கான ஒரு உள்ளார்ந்த மின்சுற்றானது(Integrated chip)ஒவ்வொரு ரிமோட் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும். தற்காலத்தில் வரும் ரிமோட்டு கருவிகளை நாமாகவே புரோகிராம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமா,  நான் சமீபமாக பயன்படுத்தி வரும் ஒரு டிடிஹெச்(DTH) ரிமோட் கருவியில், உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண டிவி ரிமோட்டின் செயல்பாடுகளை பதிவு செய்ய முடியும். இதனால் செட்டாப் பாக்ஸ்க்கு தனி ரிமோட்டு டிவிக்கு, தனி ரிமோட் என கஷ்டப்பட வேண்டிய தேவையில்லை.

ஆனால், இந்த அகச்சிவப்பு நிறக்கதிர்களில் சிக்கலும் இருக்கிறது. உதாரணமாக நான் கோபுரத்தை நோக்கி டார்ச் லைட்டை அடிக்கிறேன் என்றால் அது உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.அதை விடுத்து நான் ஏதோ ஒரு திசையில் டார்ச் லைட்டை அடித்தால் உங்களுக்கு எப்படி தெரிய வரும். ஒரே நிலை தான் டிவி ரிமோட்டுகளுக்கும் அகச்சிவப்பு ஒளிகளை டிவியில் இருக்கும் ரிசீவருக்கு நேராக அடிக்க வேண்டும். அப்படி அடிக்கும் போது தான் சரியான சமிக்ஞையை பெற்று அதற்குரிய செயலானது நடைபெறும்.

ஆனால், தற்காலத்தில் இருக்கும் ரிமோட்டு கருவிகள் ப்ளூடூத்(Bluetooth remote)தொழில்நுட்பத்தில் கூட இயங்க தொடங்கி விட்டன. இந்த இடத்தில் தகவலானது ரேடியோ அலைகளாக பகிரப்படுகிறது. இதனால் சுவற்றுக்குள் ஊடுருவி கூட சமிக்ஞைகளை கொண்டு செல்ல முடியும். மேலும் அகச்சிவப்பு கதிர்கள் 30 அடி தூரம் சிறப்பாக பயணிக்கும் என்றால், இந்த ப்ளூடூத் அலைவரிசைகள் 100 அடிக்கும் அதிகமான தூரம் சுவற்றை ஊடுருவி கூட சென்று விடும். மேலும், நேராக தான் வைத்து அடிக்க வேண்டும் என்றெல்லாம் தேவையில்லை.

இதனால் இன்னும் சில ஆண்டுகளில் நான் முன்பு குறிப்பிட்ட அகச்சிவப்பு கதிர்களை(IR remote)அடிப்படையிலான டிவி ரிமோட்டுகள் மற்றும் இன்ன பிற ரிமோட் கருவிகள் காணாமல் போகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தற்காலத்திலேயே உங்களுடைய மொபைல் ஃபோன்களை கூட டிவி,ஏசி போன்ற கருவிகளுக்கு ரிமோட் ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால், என்னதான் இருந்தாலும் அகச்சிவப்பு கதிர்களை கொண்டு பயன்படுத்தப்படக்கூடிய ரிமோட் தொழில்நுட்பமானது இன்ன பிற இடங்களில் கூட பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தெர்மல் இமேஜிங் கேமராக்களில் இந்த அகச்சிவப்பு ஒளிக்கதிர்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும்,வானியல் சார்ந்த துறைகளில் கூட இதன் பயன்பாடு நீடிக்கிறது. சரி என்ன தான் இருந்தாலும், ஒரு புதிய தகவலை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதேநேரம் அடுத்த தடவை உங்களுடைய டிவி ரிமோட் வேலை செய்யவில்லை! என்றால் தேவையின்றி அதோடு குத்து சண்டை போடுவதை விட்டுவிட்டு, உங்கள் மொபைல் போனை எடுத்து கேமராவை ஓபன் செய்து ரிமோட் பட்டன்களை அடித்து பாருங்கள். பேட்டரி தீர்ந்து விட்டது என்பதை இப்படியும் கண்டுபிடிக்கலாம்.

மற்றும் ஒரு சுவாரசியமான அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தோடு உங்களை வந்து சந்திக்கிறேன். (லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையும், விரைவில் வெளியாகும்)

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : [email protected]
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-remotes-work/

#basicElectronics #dailyElectronics #electronics

SRI KALEESWARAR S

The reality comes from here

SRI KALEESWARAR S